Home One Line P2 சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகத் தொடர்கிறார்

சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகத் தொடர்கிறார்

1092
0
SHARE
Ad

புதுடில்லி : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்தியே தலைவராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்தி இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் தனது பதவி விலகலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

உட்கட்சி மறு சீரமைப்பு தேவை என கடிதம் ஒன்று சோனியாவுக்கு சில தலைவர்கள் எழுதியதைத் தொடர்ந்து தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்தார். மற்ற தலைவர்களிடமும் இது குறித்து அவர் பேசியிருக்கிறார் என ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

கட்சியின் உட்கட்டமைப்பு முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் சோனியாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு சோனியாவின் மகன் ராகுல் காந்தி மோசமான பொதுத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். எனினும் அடுத்த ஓராண்டுக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் என சோனியா நிபந்தனை விதித்திருந்தார்.

அதன்படி ஓராண்டுகாலம் தற்போது நிறைவு பெறுகிறது.

இதற்கிடையில் இன்று கூடிய காங்கிரஸ் மத்திய செயலவைக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே தான் பதவி விலகுவதாக சோனியா அறிவித்ததாகவும் அதைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றன என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கூட்டத்தின் இறுதியில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒருமுகமான முடிவு எடுக்கப்பட முடியவில்லை. அதைத் தொடர்ந்து சோனியா காந்தியே தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.