Home One Line P1 சிலிம் இடைத் தேர்தல் : 85 விழுக்காட்டினர் வாக்களிப்பர்

சிலிம் இடைத் தேர்தல் : 85 விழுக்காட்டினர் வாக்களிப்பர்

803
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம்: மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் பேராக் மாநிலத்தின் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாகத் தொடங்கியது.

மொத்தம் 22,749 பதிவு பெற்ற வாக்காளர்களை சிலிம் சட்டமன்றம் கொண்டுள்ளது. இவர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் இன்று வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

இன்றைய வாக்களிப்புக்காக 12 வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மாலை 5.30 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

#TamilSchoolmychoice

22,749 பதிவு பெற்ற வாக்காளர்களைத் தவிர்த்து கூடுதலாக 267 முன்கூட்டிய வாக்காளர்களும் 78 அஞ்சல்வழி வாக்காளர்களும் இந்தத் தொகுதியில் பதிந்து கொண்டுள்ளனர்.

முன்கூட்டிய வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த  செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்றது.

கொவிட்-19 விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்ப சிலிம் சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்களிப்பின் போது வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து இருப்பதோடு, தூர இடைவெளியையும் அவர்கள் கடைப் பிடிப்பர். மேலும் தங்களின் கரங்களை கிருமி நாசினிக் கொண்டு தூய்மைப் படுத்திக் கொள்வர்.

மும்முனைப் போட்டி

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலிம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், தேசிய கூட்டணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையிலான மூன்று முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட்சைடி அசிஸ், 43, சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் அமீர் குசைரி முகமட் தனுசி, 38, மற்றும் கல்வியாளர் டாக்டர் எஸ்.சந்தரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சி இன்னும் பதிவு செய்யப்படாததால், அந்தக் கட்சியின் வேட்பாளரான குசைரி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நான்கு தவணை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ குசைரி அப்துல் தாலிப் (59) ஜூலை 15-ஆம் தேதி மாரடைப்பால்  காலமானதை அடுத்து சிலிம் சட்டமன்றம் காலியானது.