Home One Line P1 அம்னோ, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு

அம்னோ, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு

1042
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது.

“நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவை தேசிய கூட்டணியின் அங்கக் கட்சிகள் அல்ல. தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே.

“அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முடிவு செய்ததாகவும், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவதை, அம்னோ, தேசிய முன்னணிக்குத் தடுக்க உரிமையில்லை”

#TamilSchoolmychoice

“பல அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதிய ஆட்சியை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மையை தாம் பெற்றுவிட்டதாக அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை தாம் அமைக்க இருப்பதாக அவர் கூறினார்.  இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்ததாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.

“நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினைச் சந்திக்கத் எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. எனினும், மாமன்னர் உடல் நலக் குறைவு காரணமாக தேசிய இருதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவருடன் நான் திங்கட்கிழமை இரவு தொலைபேசியில் பேசினேன். அவர் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்தேன்” எனவும் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

மிகக் குறுகியப் பெரும்பான்மையைத் தான் கொண்டிருக்கவில்லை என உறுதிபடத் தெரிவித்தார் அன்வார். எனினும், மாமன்னர் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாக முதலில் அவரிடம் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்டியலைச் சமர்ப்பித்த பின்னரே நான் பகிரங்கமாகத் தெரிவிப்பேன் என்றும் அன்வார் கூறினார்.

“நான் ஐந்து அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. மிக வலுவான, மிக அதிகமானப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன்” என்றும் அன்வார் தன்னம்பிகையுடன் கூறினார்.

இனி அடுத்த கட்டம் மாமன்னர் தன்னைச் சந்திக்க அனுமதி தருவதுதான் என்றும் கூறிய அன்வார், பிரதமர் மொகிதினுக்கும் தனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, தனது தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வழிவிட்டு மொகிதின் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பார் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்