Home One Line P1 அன்வாருக்கு ஆதரவு அளிக்கும் குழுவில், அஸ்மின் அலி தரப்பு, மகாதீர் இடம்பெறவில்லை!

அன்வாருக்கு ஆதரவு அளிக்கும் குழுவில், அஸ்மின் அலி தரப்பு, மகாதீர் இடம்பெறவில்லை!

985
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த பெரும்பான்மை ஆதரவில் அஸ்மின் அலி தரப்பு மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுவரையிலும், துன் மகாதீர் மற்றும் அவரது பெஜுவாங் கட்சி தனக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் நேற்று தெரிவித்தார். ஆயினும், அவர் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் அன்வார் மறுக்கவில்லை.

இதனிடையே, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

2008- ஆம் ஆண்டில் அன்வார் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார், ஆனால் அது நிறைவேறவில்லை என்று மகாதீர் கூறினார்.

“இது நிரூபிக்கப்படாத உரிமைகோரல்களின் மற்றொரு அத்தியாயமா என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் தனக்கு வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.

“ஆதரவு வலுவானது மற்றும் உறுதியானது. நான்கு, ஐந்து அல்லது ஆறு அல்ல, ஆனால் அதிகமான பெரும்பான்மை” என்று அவர் கூறினார்.

தேசிய கூட்டணியின் தலைவர்கள் அன்வாரின் குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவருக்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதேபோன்ற வளர்ச்சியில், அமானா மற்றும் ஜசெக புதிய அரசாங்கத்தை அமைக்க அன்வாருக்கு போதுமான ஆதரவு இருந்தால், தங்கள் கட்சி அவரை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளன.