Home One Line P1 சபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது

சபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது

611
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : மொத்தம் 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்று கூறி அடுத்த சபா மாநில ஆட்சி அமைக்க ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஆளுநரைச் சந்தித்து இன்றே சபா முதலமைச்சரை நியமிப்பதற்கும் ஆளுநரிடம் ஜிஆர்எஸ் கூட்டணி கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜிஆர்எஸ்

மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையின்படி 38 தொகுதிகளை ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் கூட்டணி 32 தொகுதிகளை பெற்றிருக்கின்றது. எஞ்சிய 3 தொகுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.

இன்றைக்கு வெளியாகியிருக்கும் அறிவிப்புகளின்படி பார்த்தால் 3 சுயேச்சைகளின் ஆதரவையும் ஜிஆர்எஸ் பெற்றிருக்கிறது.

அடுத்த சபா முதலமைச்சர் யார் என்பதில் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. எனினும் யார் முதலமைச்சர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஜிஆர்எஸ் கூட்டணி 38 தொகுதிகளை வென்று இருந்தாலும் பிரித்துப் பார்க்கும் பொழுது அதில் சில கட்சிகள் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றன.

மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணி 24 தொகுதிகளை வென்று இருக்கின்றது.

இதில் பெர்சாத்து கட்சி கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது.

தேசிய கூட்டணி  சார்பில் போட்டியிட்ட ஸ்டார் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக தேசியக் கூட்டணி சின்னத்தில் வெற்றி காணப்பட்ட தொகுதிகள் 17 ஆகும்.

தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிபிஎஸ்  7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. இந்தக் கட்சியும் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆக மொத்தம் 24 தொகுதிகளை தேசியக் கூட்டணி கொண்டிருக்கிறது.

தேசியக் கூட்டணியில் இணைந்திருக்கும் ஸ்டார், பிபிஎஸ் இரண்டும் அம்னோவுடன் ஒத்துப் போகாத கட்சிகள்.

தேசிய கூட்டணி பக்கம் 24 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணி 14 தொகுதிகளை வென்று இருக்கின்றது. இந்த 14 தொகுதிகளையும் அம்னோ மட்டுமே வென்றிருக்கிறது. அதனுடன் இணைந்து போட்டியிட்ட மசீச, பிபிஆர்எஸ், எஸ்ஏபிபி ஆகிய கட்சிகள் எந்தத் தொகுதியையும் வெற்றி கொள்ளவில்லை.

இப்போது எழுந்துள்ள கேள்வி அம்னோ-தேசியக் கூட்டணியின் முதல் அமைச்சர் யார் என்பதுதான்!

14 தொகுதிகளைக் கொண்டிருக்கும் அம்னோ முன்மொழியும் வேட்பாளர்தான் முதலமைச்சர் ஆவார் என தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்திருக்கிறார்.

அம்னோ முதலமைச்சர் ஒருவருக்கு 24 தொகுதிகளைக் கொண்ட தேசியக் கூட்டணி ஆதரவளிக்கும் சூழலும் எழலாம்.

அம்னோ முதலமைச்சர் வேண்டாம் என்றால் ஸ்டார், பிபிஎஸ் கட்சிகள் தேசியக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளுமா?

அம்னோவுக்கும், மொகிதினின் தேசியக் கூட்டணிக்கும் இடையில் அண்மையில் அன்வார் இப்ராகிமின் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் மோதல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சபா மாநிலத்தில் அவர்கள் ஒன்றுபட்டு அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்களா?

 

இத்தகையக் குழப்பங்களோடு புதிய கூட்டணிகள், புதிய கட்சி தாவல்கள் சபா அரசியலில் அரங்கேறுமா என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திரைமறைவு அரசியல் பேச்சுவார்த்தைகளின் முடிவில் தெரிய வரும்!

-இரா.முத்தரசன்