Home One Line P1 அவசர காலம் அமுலாக்கமா? : மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது

அவசர காலம் அமுலாக்கமா? : மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது

547
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்று அதிகரிப்பால் நாட்டில் அவசர காலத்தை அமுல்படுத்த பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து மாமன்னரிடமும் பரிந்துரைந்திருக்கிறார்.

அவசர காலத்தைப் பிறப்பிக்க மாமன்னரின் ஒப்புதல் தேவை என்பதால் மாமன்னரின் ஒப்புதலுக்காக நாடே காத்திருக்கிறது.

இந்நிலையில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்துகளைக் கேட்டபின்னர் தனது முடிவை அறிவிப்பதாக மாமன்னர் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தலைநகரில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர்களோ, அல்லது அரசியல்வாதிகளோ கலந்து கொள்ள மாட்டார்கள். முழுக்க முழுக்க மலாய் ஆட்சியாளர்களே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முடிவெடுப்பார்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் மாமன்னருக்கே உண்டு. என்றாலும், தனது சக மலாய் ஆட்சியாளர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே முடிவெடுக்கப் போவதாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்திருக்கிறார்.

மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் தனது முடிவை மாமன்னர் பிரதமரிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர காலம் அமுல்படுத்தப்பட்டால் அதன் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படும். மொகிதின் தலைமையிலான அரசாங்கமே தொடர்ந்து ஆட்சியை நடத்தும்.

மாமன்னர் இதற்கான ஒப்புதலை வழங்குவாரா என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.