Home One Line P1 இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவருக்கு எதிராக 100 மில்லியன் வழக்கு

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவருக்கு எதிராக 100 மில்லியன் வழக்கு

518
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்னும் கண்டறியப்படாத தனது மகள் பிரசன்னா டிக்சாவை காவல் துறை கண்டுபிடிக்கத் தவறியதை அடுத்த, எம். இந்திரா காந்தி, இந்த வாரம் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் படோருக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்திரா காந்தி அதிரடி குழு (இங்காட்) தலைவர் அருண் துரைசாமி கூறுகையில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று கூறினார்.

“பிரசன்னாவை திரும்ப அழைத்து வர காவல் துறைத் தலைவருக்கு போதுமான நேரம் கொடுத்துள்ளோம். நாங்கள் எல்லா வழிகளிலும் முயற்சித்தோம், எனவே இந்த வழக்கைத் தொடருவோம், “என்றார் அருண்.

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஒரு கடிதத்தை ஒப்படைக்க, இந்திரா 12 நாட்களுக்கு புத்ராஜெயாவுக்கு 350 கி.மீ பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

பிரதமருக்கு எழுதிய கடிதம் தவிர, இந்திரா காந்தி மாமன்னருக்கும் ஒரு குறிப்பை சமர்ப்பிப்பார் என்று அருண் கூறினார்.

“நீதி நடை (நீதி கோருவதற்காக நடைப்பயணம்) நவம்பர் 21- ஆம் தேதி காலை 10 மணிக்கு சுங்கை பட்டாணியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கு நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது அறிந்திருப்பதால் (சமீபத்திய) தொற்றுநோய் தகவல்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

“மேலும் கட்டுபாடு விதிக்கப்பட்டால், மற்றொரு தேதியை மதிப்பாய்வு செய்வோம்” என்று அவர் கூறினார்.

இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா எங்கு உள்ளார் என்பது தனக்குத் தெரியும் என்றும், சரணடையும்படி அவரை வலியுறுத்தியதாகவும் ஜனவரி மாதம் காவல் துறைத் தலைவர் கூறியிருந்தார்.

பிரசன்னாவை தன்னுடன் அழைத்துச் சென்ற ரிட்சுவான் மீது கூட்டரசு நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்த போதிலும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

கே. பத்மநாதன் எனும் முகமட் ரிட்சுவான், 2009- இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், பிரசன்னாவை கடத்திச் செல்லும் போது அவர் இன்னும் சிறு குழந்தையாக இருந்தார்.

2014-ஆம் ஆண்டில், பிரசன்னாவை தனது தந்தையிடமிருந்து திரும்ப அழைத்துச் வருமாறு ஈப்போ உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. ரிட்சுவானை கைது செய்ய 2016- ல் கூட்டரசு நீதிமன்றம் காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

குழந்தையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும் இரு பெற்றோரிடமிருந்தும் அனுமதி தேவை என்றும் 2018- ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது.