Home One Line P1 “யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பகுதி – பூஜாங் பள்ளத்தாக்கு ஏன் விடுபட்டது?” விக்னேஸ்வரன் கேள்வி

“யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பகுதி – பூஜாங் பள்ளத்தாக்கு ஏன் விடுபட்டது?” விக்னேஸ்வரன் கேள்வி

1005
0
SHARE
Ad

கிள்ளான் : நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற்ற 2020-ஆம் ஆண்டுக்கான மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், அரசியல், கல்வி, சமூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், நாட்டின் வரலாற்று அகழ்வாராய்ச்சி மையங்களில் ஒன்றான பூஜாங் பள்ளத்தாக்கு குறித்தும் பேசினார்.

உலகின் முக்கிய அகழ்வாராய்ச்சி இடங்களை யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரிவு உலக பாரம்பரியப் பகுதியாக அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் பூஜாங் பள்ளத்தாக்கு ஏன் உலகப் பாரம்பரியப் பகுதியாக இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் விக்னேஸ்வரன் தனதுரையில் கேள்வி எழுப்பினார்.

“நாட்டின் அரிய பொக்கிஷமாகக் கருதப்படும் பூஜாங் பள்ளத்தாக்கை அரசாங்கம் கூடிய விரைவில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் யுனெஸ்கோ பிரிவின் கீழ் அனைத்துலக பாரம்பரியப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என மஇகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்ற கோரிக்கையை விக்னேஸ்வரன் தனதுரையில் முன்வைத்தார்.

#TamilSchoolmychoice

“1987-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ, பாரிஸ் நகரிலிருந்து ஒரு ஆய்வுக் குழுவை பூஜாங் பள்ளத்தாக்குக்கு அனுப்பி அந்த இடத்தை ஆய்வு செய்து அதனை பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள சுங்கை பத்து என்ற அகழ்வாராய்ச்சி இடமும் நாட்டின் பழம்பெரும் அரிய வகை பழங்காலப் பொருட்களைக் கொண்டிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சிகளுக்கும், அகழ்வாராய்ச்சிகளுக்கும் பெரும் பொருட்செலவு தேவைப்படும் என்றும் கணக்கிடப்படுகிறது” என்றும் விக்னேஸ்வரன் தனதுரையில் மேலும் கூறினார்.