Home நாடு எஸ்பிஎம் தேர்ச்சி விகிதங்கள் தேசிய அளவில் அதிகரிப்பு

எஸ்பிஎம் தேர்ச்சி விகிதங்கள் தேசிய அளவில் அதிகரிப்பு

710
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று (ஜூன் 10) வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தேசிய அளவில் சிறப்பான மேம்பாட்டைக் கண்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் முகம்ட ரட்சி முகமட் ஜிடின் (படம்) அறிவித்தார்.

கடந்தாண்டு முழுவதும் கொவிட்-19 பாதிப்புகளால் மாணவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கினாலும், தேசிய அளவிலான தேர்ச்சி விகிதம் 0.06 விழுக்காடு அதிகரித்தது என்றும் அவர் அறிவித்தார்.

கடந்தாண்டு நடைபெற வேண்டிய 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதத்தில் நடைபெற்றன.

#TamilSchoolmychoice

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையம் வழியாகப் பெறுவதற்கும் தெரிந்து கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று காலை 10.00 மணி முதல் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். கீழ்க்காணும் இணையத் தளங்களில் இந்த முடிவுகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்:

myresult1.moe.gov.my

myresult2.moe.gov.my

எதிர்வரும் ஜூன் 17-ஆம் தேதி மாலை 6.00 மணிவரை தேர்வு முடிவுகளை இணையம் வழி பெற்றுக் கொள்ளலாம்.

2019 எஸ்பிஎம் தேர்வுகளின் தேசிய அளவிலான தேர்ச்சி விழுக்காடு 4.86 ஆக இருந்தது. 2020 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விழுக்காடு 4.80 ஆக இருந்தது என்றும் இதன் மூலம் தேர்ச்சி விழுக்காடு தேசிய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட விழுக்காடு குறைவாக இருந்தால் அது சிறந்த தேர்ச்சியைக் குறிப்பதாகப் பொருள்படும் என்றும் ரட்சி ஜிடின் விளக்கினார்.

அதிகாரபூர்வ தேர்வு முடிவுகளின பிரதியை ஜூன் 14 தொடங்கி கீழ்க்காணும் இணையத் தளத்தின்வழி மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்:

myresult3.moe.gov.my

அதிகாரபூர்வ எஸ்பிஎம் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ் பிரதி எதிர்வரும் ஜூலை 10 முதல் கட்டம் கட்டமாக வெளியிடப்படும்.

இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2020-க்கான எஸ்பிஎம் தேர்வு இந்த ஆண்டு 3,310 மையங்களில் நடத்தப்பட்டன. 401,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதினர்.