Home உலகம் ஈரோ 2020 : பரபரப்பான 3 ஆட்டங்கள்

ஈரோ 2020 : பரபரப்பான 3 ஆட்டங்கள்

940
0
SHARE
Ad

ரோம் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் மூன்று பரபரப்பான ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. (குறிப்பிடப்பட்டிருக்கும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்)

இன்று சனிக்கிழமை (ஜூன் 12) இரவு 9.00 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வேல்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய இருநாடுகள் மோதுகின்றன. அசர்பைஜான் நாட்டின் பாக்கு அரங்கில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க்கும் பின்லாந்தும் மோதுகின்றன. டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம், ரஷியா ஆகிய இருநாடுகளும் களம் காண்கின்றன. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

எல்லா ஆட்டங்களும் ஆஸ்ட்ரோவில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.

துருக்கியை வென்ற இத்தாலி

இதற்கிடையில் இன்று அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இத்தாலி தருக்கி இடையிலான முதல் ஆட்டத்திலேயே இத்தாலி 3-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. 3 கோல்களுமே இரண்டாம் பாதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டன.

இதன் மூலம் தனது வலிமையை நிரூபித்திருக்கும் இத்தாலி, கிண்ணத்தை வெற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ள குழுக்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதுவரை 39 ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கும் இத்தாலி மிக அதிகமாக கோல் அடித்த ஆட்டம் இன்றைய ஆட்டமாகும்.

கோலாகலமாகத் தொடங்கிய ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகள்

கடந்தாண்டு 2020-இல் நடைபெறவேண்டிய ஈரோ 2020 என்ற ஐரோப்பியக் கிண்ணத்திற்கான 16-வது காற்பந்து போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி தொடங்கின.

இத்தாலியும், துருக்கியும் மோதிய முதல் ஆட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பிரம்மாண்டமான நீரூற்றுகள் போன்ற வாணவேடிக்கைகள், வண்ணமயமான மிகப் பெரிய பலூன்கள், இசை, பாடல் படைப்புகளோடு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். கூடல் இடைவெளியும் பார்வையாளர்கள் அரங்கில் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

11 ஐரோப்பிய நகர்களில் போட்டிகள்

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளாகும்.

கடந்தாண்டு கொவிட்-19 தொற்றுகளால் ஒத்தி வைக்கப்பட்ட இந்தப் போட்டிகள் ஐரோப்பா முழுவதும் மொத்தம் 13 நகர்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த நகர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை இழந்த இரண்டு நகர்கள் அயர்லாந்தின் டப்ளின் நகரும் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரும் ஆகும்.

காற்பந்து போட்டிக்கான விளையாட்டு மைதான அரங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்காததால் பிரசல்ஸ் அந்த 13 நகர்களில் ஒன்றாக போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழந்தது.

காற்பந்து போட்டிக்கான பார்வையாளர்களை அனுமதிக்கும் உறுதிமொழியை வழங்காத காரணத்தால் டப்ளின் போட்டிகளில் ஒன்றை நடத்தும் வாய்ப்பை இழந்தது.

அதைத் தொடர்ந்து மொத்தம் 11 நகர்களில் இந்தக் காற்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. அரை இறுதி ஆட்டமும், இறுதி ஆட்டமும் இலண்டனில் நடைபெறுகின்றன.

போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்பட்டாலும், ஈரோ 2020 என்றே இந்தக் காற்பந்து போட்டிகள் அழைக்கப்படுகின்றன.

எதிர்வரும் 11 ஜூலை 2021 வரை இந்தக் காற்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஐரோப்பியக் கிண்ணத்திற்கான போட்டிகள் தொடங்கி 60 ஆண்டுகள் கடந்திருப்பதால் இந்த முறை நடத்தப்படும் போட்டிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக UEFA எனப்படும் யூனியன் ஆப் ஈரோப்பியன் புட்பால் அசோசியேஷன்ஸ் (Union of European Football associations) அமைப்பின் தலைவர் மைக்கல் பிளாட்டினி தெரிவித்தார்.

இந்த அமைப்புதான் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளையும் நடத்துகிறது. அதன் தலைவராக இருக்கும் மைக்கல் பிளாட்டினி பிரான்ஸ் நாட்டின் முன்னாள் காற்பந்து விளையாட்டாளருமாவார்.

கடந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகள் 2016-இல் நடைபெற்றன. அப்போது ஐரோப்பியக் கிண்ண வெற்றியாளராக போர்ச்சுகல் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் குழுவில் தொடர்ந்து இந்த முறையும் உலகின் முதல் நிலை விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவதால் மீண்டும் போர்ச்சுகல் கிண்ணத்தைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இந்த முறை நடைபெறும் காற்பந்து போட்டிகளில் காணொலி (வீடியோ) மூலம் போட்டி நடுவர் இறுதி முடிவை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.