Home நாடு அம்னோவின் கெடு : “அரசியல் குழுவின் முடிவு – உச்சமன்ற முடிவு அல்ல” – இஸ்மாயில்...

அம்னோவின் கெடு : “அரசியல் குழுவின் முடிவு – உச்சமன்ற முடிவு அல்ல” – இஸ்மாயில் சாப்ரி

670
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் “கூடிய விரைவில்” நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென அம்னோ தேசிய கூட்டணிக்கு கெடு விதித்து நேற்று திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி இந்தக் கெடுவை விதித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விளக்கமளித்த தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி, அந்தப் பதினான்கு நாட்கள் கெடு என்பது அம்னோவின் அரசியல் குழு செய்திருக்கும் பரிந்துரை மட்டும்தான் என்றும் இறுதி முடிவல்ல என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கொள்கை ரீதியான இறுதி முடிவை அம்னோ உச்சமன்றம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் சாப்ரி மேலும் கூறினார். அவ்வாறு அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டாவிட்டால் அம்னோவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் சாப்ரி மேலும் தெரிவித்தார்.

அம்னோ விதித்த 14 நாட்கள் கெடு

நேற்று விடுத்த அறிக்கையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கிய சாஹிட் ஹாமிடி,  அவ்வாறு செய்யத் தவறினால், தகுந்த நடவடிக்கை எடுக்க அம்னோ உச்சமன்றக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

ஆட்சியாளர்களின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப அரசாங்கம் செய்யத் தவறியது அவர்களுக்கு அவமரியாதை என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.

அம்னோ அரசியலமைப்பின் 3- வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பைப் பாதுகாக்க நிறுவப்பட்ட ஒரு கட்சியாக அது இருப்பதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால் மேலதிக நடவடிக்கைகளை இறுதி செய்ய உச்சமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் ஹாமிடி தெரிவித்தார்.