Home நாடு மகாதீர் தேசிய மீட்சித் திட்டத்தின் வழி, தேசியக் கூட்டணியில் இணைவாரா?

மகாதீர் தேசிய மீட்சித் திட்டத்தின் வழி, தேசியக் கூட்டணியில் இணைவாரா?

524
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் கொவிட் தொடர்பான மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் நியமிக்கப்பட்டார்.

மீட்சித் திட்டத்திற்கான குழுவைக் கட்டமைப்பதில் தற்போது தெங்கு சாப்ருல் ஈடுபட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் தெங்கு சாப்ருல் தன்னை அழைத்து, மீட்சித் திட்டக் குழுவில் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

எனினும், மீட்சித்திட்டக் குழு தொடர்பில் தெங்கு சாப்ருலை எப்போது சந்திப்பது என்பது குறித்தோ, அதில் இடம் பெறுவதா இல்லையா என்பது குறித்தோ தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அரசியல் வட்டாரங்களில் இந்த நகர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் பிரதமர் மொகிதினுக்கும், தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும் ஆதரவு தரப்போவதில்லை என்று கூறிவந்த மகாதீர், இப்போது அதே தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் கொவிட் மீட்சிக் குழு திட்டத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

அம்னோ, தேசியக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ள அறிவித்திருக்கும் நிலையில் மொகிதினும், மகாதீரும், அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதற்கொப்ப மீண்டும் கைகோர்க்கலாம் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன.

அதன் முதல் கட்டமாக மொகிதின் அரசாங்கம் மகாதீரின் பெஜூவாங் கட்சியின் பதிவை அங்கீகரித்துக் கடிதம் வழங்கியிருக்கிறது. நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும், அந்த நீதிமன்ற முடிவை எதிர்த்து உள்துறை அமைச்சும், சங்கப் பதிவகமும் போராடியிருக்க முடியும். ஆனால், அதைத் தவிர்த்து விட்டு அங்கீகாரக் கடிதத்தை உள்துறை அமைச்சு வழங்கியிருக்கிறது.

இப்போது இரண்டாவது இணைப்பு வியூகமாக, மீட்சித் திட்டத்தில் இணைந்து கொள்ள மகாதீர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ விலகி விட்டதால், இனி தான் தோற்றுவித்த பெர்சாத்து கட்சியுடனும், ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்துடனும் மகாதீர் நெருக்கம் பாராட்டத் தொடங்கலாம் என்பதன் அறிகுறியாக இந்த அரசியல் திருப்பங்கள் பார்க்கப்படுகின்றன.