Home நாடு அகமட் மஸ்லான் : குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவரா?

அகமட் மஸ்லான் : குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவரா?

704
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்மீது அதிகரித்த நம்பகத்தன்மையும், எதிர்பார்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினை கொவிட் மீதான தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக இஸ்மாயில் சாப்ரி நியமித்தது கடும் கண்டனங்களை எழுப்பியிருந்தது.

அதன் அனல் தாக்கங்கள் அடங்குவதற்குள்ளாகவே, அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

அம்னோவின் அசாலினா ஒத்மான் சைட் இதற்கு முன் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக இருந்து அண்மையில் பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து காலியாகியுள்ள அந்தப் பதவிக்கு அகமட் மஸ்லான் முன்மொழியப்படுவார்.

இதனை பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

2013-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றது தொடர்பிலும், அந்தத் தொகையை வருமானவரி இலாகாவிடம் முறையாக அறிவிக்காத காரணத்திற்காகவும் அகமட் மஸ்லான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்ற அறைகூவல்கள் பரவலாக விடுக்கப்பட்டன.

ஜசெகவின் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் எதிர்கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக முன்மொழியப்படுவார் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இங்கா கோர் மிங் கடந்த பக்காத்தான் ஹாராப்பான் ஆட்சியின்போது நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்தவராவார்.

அகமட் மஸ்லான் முன்மொழியப்பட்டதைத் தொடர்ந்து எதிர்கட்சிகளும் இஸ்மாயில் சாப்ரி மீதான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.