Home நாடு துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை

துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை

699
0
SHARE
Ad

(கடந்த காலங்களில் அடுத்த பிரதமர் இவர்தான் என அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டவர் துங்கு ரசாலி ஹம்சா. மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டவர். இந்த முறையும் மொகிதின் யாசின் பதவி விலகுகிறார் என்றதும் துங்கு ரசாலிதான் அடுத்த பிரதமர் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டன. மீண்டும் ஒரு முறை பிரதமராகும் வாய்ப்பை இழந்திருக்கிறார் துங்கு ரசாலி. இடையில் வந்த இஸ்மாயில் சாப்ரி பிரதமர் பதவியைத் தனது சாதுரியத்தாலும் வியூகத்தாலும் கைப்பற்றியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரால் மறக்கப்பட்டு விட்ட துங்கு ரசாலியின் கடந்த கால சாதனைகளையும், அரசியல் பயணத்தையும் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

பிரதமர் முஹிடின் யாசின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த தருணம் தொட்டு ஊடகங்களிலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர் துங்கு ரசாலி ஹம்சா.
84 வயதான அம்னோவின் மூத்த தலைவர். நீண்ட காலமாக தொடர்ந்து கிளந்தானிலுள்ள குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர்.


மேலும் பார்க்க : செல்லியல் காணொலி:

#TamilSchoolmychoice


முஹிடின் யாசினுக்குப் பதிலாக அம்னோவின் பிரதமர் வேட்பாளர் இவர்தான் எனத் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால், இடையில் வந்த இஸ்மாயில் சாப்ரி தனது சாதுரியத்தாலும், அரசியல் வியூகத்தாலும், பிரதமராகத் தேர்வு பெற்றிருக்கிறார்.

யார் இந்த துங்கு ரசாலி என்ற கேள்வி இன்றைய இளம் தலைமுறையினர் மனங்களில் எழுந்திருக்கக் கூடும். நீண்டதொரு அரசியல் பயணத்தைக் கொண்ட துங்கு ரசாலி கடந்து வந்த சில முக்கிய வரலாற்று சம்பவங்களை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

பிரிட்டனில் படித்தவர் – கிளந்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்

கிளந்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் துங்கு ரசாலி. பிரிட்டனில் படித்துக் கொண்டிருக்கும்போதே அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்வம் காட்டினார்.

இலண்டனில் இயங்கிய மலாயா மாணவர்கள் சங்கத் தலைவராகவும் பிரிட்டனின் மலாய் சங்கத்தின் செயலாளராகவும் அவர் செயல்பட்டார்.
கல்வி முடிந்து நாடு திரும்பியதும், 1962 ஆம் ஆண்டில் தனது இருபத்தைந்தாவது வயதில் அம்னோ உலு கிளந்தான் தொகுதியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ஆம் ஆண்டில் பூமி புத்ராக்களின் பொருளாதார பங்கெடுப்பை உயர்த்துவதற்காக பூமிபுத்ரா வங்கி அமைக்கப்படுவதில் பங்காற்றினார் துங்கு ரசாலி. அந்த வங்கியின் முதல் நிர்வாக இயக்குனராகவும் அவர் நியமிக்கப்பட்டார் அப்போது அவருக்கு வயது 28-தான்.

வட அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் (Belfast) பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் கல்வி கற்றவர் துங்கு ரசாலி. அவரின் அறிவாற்றலை அறிந்துகொண்ட அப்போதைய பிரதமர் துன் ரசாக், தொடர்ந்து பல பதவிகளுக்கு அவரை நியமித்தார்.

1970-ஆம் ஆண்டில் பூமிபுத்ராக்களின் பொருளாதார நலன்களுக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது பெர்னாஸ் என்னும் அரசாங்க அமைப்பு. (PERNAS). அதன் முதல் தலைவராக பொறுப்பு வகித்தவர் துங்கு ரசாலிதான்.

பெட்ரோனாசின் முதல் தலைவர்

மலேசியாவின் எண்ணெய் வளத்தை நிர்வகிக்க 1974-ஆம் ஆண்டில் அரசாங்கம் அமைத்த நிறுவனம் பெட்ரோனாஸ். அதனைக் கட்டமைத்து, அதன் முதல் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் துங்கு ரசாலிதான் செயல்பட்டார்.

துங்கு ரசாலி பெட்ரோனாசைத் தோற்றுவித்தபோது அதில் இயக்குநர்களில் ஒருவராக அவர் நியமித்த இந்திய வணிகப் பிரமுகர் – இன்று மலேசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழும் டி. ஆனந்த கிருஷ்ணன்.

ஆனந்தகிருஷ்ணன்

ஆனந்த கிருஷ்ணன் அப்போது அனைத்துலக அளவில் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டு வந்ததால், அவரின் அந்த அனுபவத்திற்காக அவரையும் பெட்ரோனாசில் இயக்குநர் வாரியத்தில் இணத்துக் கொண்டார் துங்கு ரசாலி. அவர்கள் இருவருக்கும் இடையில் அதன் காரணமாக நெருக்கமான நட்பு உண்டு – இது இன்றுவரை தொடர்கிறது – என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

அம்னோ அரசியலில் தீவிர ஈடுபாடு

இப்படியாக அரசாங்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டே, அம்னோ அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தினார் துங்கு ரசாலி.
1974 பொதுத்தேர்தலில் அவர் உலு கிளந்தான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அந்தத் தொகுதி குவா மூசாங் என பெயர் மாற்றம் கண்டது.

அப்போது முதல் இன்றுவரை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 46 ஆண்டுகாலமாக நீடிக்கிறார் துங்கு ரசாலி. மலேசியாவில் தொடர்ச்சியாக நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அவர்தான்.

1973-ஆம் ஆண்டிலேயே அம்னோவின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர் துங்கு ரசாலி.

தொடர்ந்து 1975 ஆம் ஆண்டில் அம்னோவின் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவதாக துன் கபார் பாபாவும், இரண்டாவதாக துங்கு ரசாலியும் மூன்றாவதாக துன் மகாதீர் முகமட்டும் அந்த ஆண்டில் உதவித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துங்கு ரசாலி அம்னோ உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 37-வயதுதான்! தனது 37-வது வயதிற்குள் இத்தனை சாதனைகளையும், பதவிகளையும் அடைந்தவர்தான் துங்கு ரசாலி.

அம்னோவின் திசையை மாற்றிய துன் ரசாக்கின் மரணம்

1976-இல் நிகழ்ந்த துன் ரசாக்கின் அகால மரணம் நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. துங்கு ரசாலியின் அரசியல் பயணமும் திசை மாறியது.

துன் ரசாக் மறைவுக்குப் பின், அம்னோ துணைத் தலைவராக இருந்த துன் ஹூசேன் ஓன் அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் தேர்வானார்.
இடைக்காலத் துணைத் தலைவர் பதவிக்கு மூன்று உதவித் தலைவர்களில் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஹூசேன் ஓன்.

கபார் பாபா முதலாவது உதவித் தலைவர் என்றாலும் அவரை நிராகரித்தார் ஹூசேன் ஓன். அப்போதிருந்த அம்னோ தலைவர்களில் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பு இல்லாதவராகவும், சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியாதவராகவும் கபார் பாபா பார்க்கப்பட்டார்.

அப்போது துங்கு ரசாலி இரண்டாவது உதவித் தலைவராக இருந்தாலும் மிக இளவயது, இன்னும் கல்யாணம் ஆகாதவர். இந்தக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ, அவரையும் நிராகரித்தார் ஹூசேன் ஓன்.

துன் உசேன் ஓன் – துன் அப்துல் ரசாக்

மூன்றாவது உதவித் தலைவராக இருந்த மகாதீரை துணைத் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் நியமித்தார் ஹூசேன் ஓன்.

அந்த முடிவால் அதிருப்தி அடைந்த கபார் பாபா, ஹூசேன் ஓன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.

இடைக்காலத் தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்படாவிட்டாலும், ஹூசேன் ஓன்னின் அபிமானத்தைப் பெற்ற துங்கு ரசாலியோ, ஹூசேன் ஓன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1976 முதல் 1984 வரை துங்கு ரசாலிதான் நாட்டின் நிதியமைச்சர்.

பிரதமரான மகாதீருக்கும் துங்கு ரசாலிக்கும் இடையிலான மோதல்கள்

1981-ஆம் ஆண்டில் உடல்நலம் காரணமாக ஹூசேன் ஓன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து மகாதீர் பிரதமராகவும் அம்னோ தலைவராகவும் தேர்வு பெற்றார். இந்த முறை துணைத் தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல், தேர்தல் மூலம் அம்னோவின் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்போம் என்றார் மகாதீர்.

1981-ஆம் ஆண்டில் மகாதீரின் தலைமைத்துவத்தில் அம்னோ கட்சித் தேர்தல் நடைபெற்றது.

அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த (துன்) மூசா ஹீத்தாமும், அப்போதைய நிதியமைச்சராக இருந்த துங்கு ரசாலியும் துணைத் தலைவருக்கான போட்டியில் குதித்தனர்.

மகாதீரோ பகிரங்கமாகவே மூசா ஹீத்தாமை ஆதரித்தார். அந்தப் போட்டியில் மூசா ஹீத்தாம் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். எனினும் தோல்விக்குப் பின்னரும் துங்கு ரசாலி நிதியமைச்சராக மகாதீர் அமைச்சரவையில் தொடர்ந்தார்.

1984-இல் துங்கு ரசாலியை அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சராக நியமித்தார் மகாதீர். துங்கு ரசாலிக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக தனது நெருங்கிய சகாவான டாயிம் சைனுடினை நியமித்தார் மகாதீர்.

இதனால் மகாதீர்-துங்கு ரசாலி இடையிலான கருத்து வேறுபாடுகள் – மோதல்கள் மோசமடைந்தன. 1987 அம்னோ தேர்தலில் மகாதீரை எதிர்த்து தலைவருக்கு போட்டியிட்டார் துங்கு ரசாலி. அந்தத் தேர்தலில் 43 வாக்குகள் வித்தியாசத்தில் மகாதீரிடம் தோல்வி அடைந்தார்.

அம்னோவில் பிளவு – செமாங்காட் 46 கட்சியைத் தோற்றுவித்த துங்கு ரசாலி
எனினும் அந்த 1987 அம்னோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து துங்கு ரசாலியின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் சென்றனர்.

அதைத் தொடர்ந்து நடந்த சட்டப் போராட்டங்களால் கட்சி பிளவு கண்டது. அம்னோ பாரு என புதிய கட்சியை மகாதீர் அமைத்தார். அந்தக் கட்சியில் துங்கு ரசாலியை மகாதீர் சேர்த்துக் கொள்ளவில்லை.

துங்கு ரசாலியோ, செமாங்காட் 46 என்ற புதிய மலாய் கட்சியைத் தோற்றுவித்தார்.

1990-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு இணையாக கூட்டணி அணி அமைத்து போட்டியிட்டார் துங்கு ரசாலி. பாஸ்,ஜசெக, சபாவின் பிபிஎஸ், எம்.ஜி.பண்டிதனின் ஐபிஎப் கட்சி ஆகியவை அந்தக் கூட்டணியில் இணைந்தன.

1988-ஆம் ஆண்டில் மஇகாவில் இருந்து விலக்கப்பட்ட பண்டிதன் ஐபிஎப் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்து இயங்கி வந்தார். 1990 பொதுத் தேர்தலின்போது துங்கு ரசாலி அமைத்த செமாங்காட் 46 கூட்டணியில் இணைந்தார் பண்டிதன்.

செமாங்காட் சார்பில் போட்டியிட்ட பண்டிதன் – டாக்டர் பாஸ்கரன்

1990 பொதுத் தேர்தலில் செமாங்காட் 46 கூட்டணியின் கீழ் ஐபிஎப் தலைவர் பண்டிதன் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். மற்றொரு ஜபிஎப் தலைவரான டாக்டர் ஞானபாஸ்கரன் பினாங்கு, நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

அவர்கள் இருவருமே சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தத் தொகுதிகளில் ஜசெக சின்னத்தில் போட்டியிட்டனர்.

தெலுக் இந்தான் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் கெராக்கான் கட்சியின் ஓங் தின் கிம் என்பவரிடம் 2,111 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் பண்டிதன்.

நிபோங் திபால் தொகுதியில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கெராக்கான் கட்சியின் வழக்கறிஞர் டோமினிக் ஜோசப் புதுச்சேரியிடம் 1,636 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார் டாக்டர் பாஸ்கரன்.

1990 பொதுத் தேர்தலில் இறுதி நேரத்தில் சபா முதலமைச்சரான ஜோசப் பைரின் கித்திங்கானின் பிபிஎஸ் கட்சி செமாங்காட் 46 கூட்டணியில் இணைந்தது துங்கு ரசாலிக்குக் கிடைத்த மிகப் பெரிய பலமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அதுவே அவருக்கு வினையாகவும் முடிந்தது.

சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துங்கு ரசாலிக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் இஸ்லாம் அல்லாத, மாற்று மத சின்னம் அணிவிக்கப்பட்ட புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரங்களின்போது வெளியிடப்பட்டன.

அதன் காரணமாகவும், மலாய் வாக்குகள் போதுமான அளவில் கிடைக்காத காரணத்தாலும் 1990 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார் துங்கு ரசாலி. சில நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் செமாங்காட் கைப்பற்றியது.

துங்கு ரசாலிக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், அம்னோ வசம் இருந்த கிளந்தான் மாநில அரசாங்கத்தை வீழ்த்திக் காட்டியதுதான். துங்கு ரசாலியின் பிரச்சாரத்தாலும், இணைப்பாலும், பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தது.

தேசிய முன்னணிக்கு ஆதரவாக மாறிய பண்டிதனின் ஐபிஎப்

இதற்கிடையில், பண்டிதனின் ஐபிஎப் கட்சிக்கு இந்திய சமூகத்தில் இருந்த கணிசமான ஆதரவை 1990 பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம் கண்டு கொண்ட அப்போதைய பிரதமர் துன் மகாதீர், அந்தக் கட்சியோடு பேச்சு வார்த்தை நடத்தி தேசிய முன்னணிக்கு ஆதரவாக அதனை ஈர்த்துக் கொண்டார்.

அப்போது முதல் ஐபிஎப் கட்சி தொடர்ந்து தேசிய முன்னணியின் நட்புக் கட்சியாக இன்றுவரை விளங்கி வருகிறது. 1995 பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணிக்கு எதிராக அணி அமைத்துப் போட்டியிட்டார் துங்கு ரசாலி. அதிலும் மோசமான தோல்விகளை அடைந்தார்.

மீண்டும் மகாதீரோடு இணைந்த துங்கு ரசாலி

அதன்பின்னர் மகாதீரோடு மீண்டும் அரசியல் உடன்பாடு கண்டார் துங்கு ரசாலி. செமாங்காட் 46 கட்சியைக் கலைத்தார். தனது அணியினரோடு மீண்டும் அம்னோவுக்குத் திரும்பினார்.

மீண்டும் துங்கு ரசாலி – மகாதீர் இணைப்பு ஏற்பட, பின்னணியில் பாடுபட்டவர் வணிகப் பிரமுகர் ஆனந்த கிருஷ்ணன்தான் என்ற ஆரூடத் தகவலும் உண்டு.

அதன் பின்னர் இன்று வரை அம்னோவுடனேயே தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் துங்கு ரசாலி. ஏதோ சில காரணங்களால் அம்னோவின் சார்பில் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்புகள் இருந்தும் துங்கு ரசாலி ஏற்கவில்லை.

1995 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் துங்கு ரசாலி அம்னோவுக்கு திரும்பினாலும், கட்சியில் அவரால் மீண்டும் செல்வாக்கு பெற முடியவில்லை. கட்சித் தேர்தல்களில் வெல்ல முடியவில்லை. மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளையும் அவர் ஏற்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் தொடர்கிறார்.

ஒருமுறை அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் துங்கு ரசாலி. ஆனால் போதிய தொகுதிகளின் ஆதரவு அவரின் வேட்புமனுவுக்குக் கிடைக்கவில்லை.

2018 பொதுத் தேர்தல் அம்னோ சந்தித்த தோல்விகளுக்குப் பிறகு அம்னோ கட்சியில் ஆலோசனைக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
மொகிதின் யாசின் பதவி விலகிய தருணத்தில், அம்னோவின் பிரதமர் வேட்பாளர் – அனைத்துக் கட்சிகளின் நடுநிலை பிரதமர் வேட்பாளர் – என்ற விவாதங்களின் அடிப்படையில் மீண்டும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்தார் துங்கு ரசாலி.

ஆனால், இந்த முறையும் பிரதமராகும் தனது முயற்சியில் தோல்வியடைந்திருக்கிறார் துங்கு ரசாலி. அவரது கனவுகளைத் தகர்த்து, தனது அரசியல் வியூகத்தால் நாட்டின் 9-ஆவது பிரதமராகி விட்டார் இஸ்மாயில் ங்ப்ரி.

துங்கு ரசாலியின் திருமணம்

இத்தனை அரசியல் போராட்டங்களுக்கு இடையிலும் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்தவர் துங்கு ரசாலி. 1993-இல்தான் தனது 56-வது வயதில் நூர் யுவோன் அப்துல்லா என்ற சீனப் பெண்மணியைத் திருமணம் புரிந்தார் அவர். நூர் யுவோன் 2015-இல் காலமாகி விட்டார்.

துங்கு ரசாலிக்கு குழந்தைகள் யாரும் இல்லை என்பது அவரின் வாழ்க்கைப் பயணத்தின் இன்னொரு நெருடல்.

எதிர்வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் துங்கு ரசாலி குவா மூசாங் தொகுதியில் மீண்டும் போட்டியிடக் கூடும். அப்படிப் போட்டியிட்டால், அதன் மூலம் 47 ஆண்டுகள் தொடர்ச்சியாக – நீண்ட காலமாக – நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற புதிய சாதனை வரலாற்றை அவர் படைப்பார்.

அதைத் தவிர்த்து அரசியல் ரீதியாக அம்னோவிலோ, அம்னோவிற்கு வெளியிலோ துங்கு ரசாலி குறிப்பிடத்தக்க அரசியல் திருப்பத்தையோ மாற்றத்தையோ இனிமேலும் மலேசிய அரசியலில் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம்தான்.

– இரா.முத்தரசன்