கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை அமைச்சர்கள் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ஹாலிமா பின் சாதிக் இருவரும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனவரி 18-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழா குறித்த நிபந்தனைக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி அன்னதானங்களுக்கு இந்த முறை தைப்பூசத் திருவிழாவின்போது அனுமதியில்லை. காவடிகளுக்கும் அனுமதியில்லை.
எனினும், தைப்பூசம் மிதமான அளவில் கொண்டாடப்பட வாய்ப்பு வழங்கும் வகையில் பால்குடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
#TamilSchoolmychoice
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பால்குடங்கள் ஏந்திவர அனுமதி வழங்கப்படும்.
இரத ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பத்துமலை நோக்கிச் செல்லும் வெள்ளி இரதம் பத்து இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும். முன்கூட்டியே பதிந்து கொண்டவர்கள் மட்டும் இரத ஊர்வலத்தில் உடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.
சரவணன் கருத்து
ஹாலிமாவின் அறிவிப்பு குறித்துக் கருத்துரைத்த மனித வள அமைச்சரும், மஇகா துணைத் தலைவருமான சரவணன், நமது தலைவர்களில் ஒரு சிலரே தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கு எதிராக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த தருணத்தில், இந்துப் பெருமக்கள் தைப்பூசத்தை மிதமான அளவில் கொண்டாட அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.