Home உலகம் இந்தோனிசியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தருவிப்பு – சரவணன் பேச்சு வார்த்தை

இந்தோனிசியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தருவிப்பு – சரவணன் பேச்சு வார்த்தை

424
0
SHARE
Ad

ஜாகர்த்தா : இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவுக்கு அண்மையில் வருகை மேற்கொண்ட மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், இந்தோனிசியாவின் மனித வள அமைச்சர் இடா பவுசியாவை ஜனவரி 24-இல் சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு ஏதுவாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் பிப்ரவரி 7, 8-ஆம் தேதிகளில் இந்தோனிசியாவின் பாலி தீவில் கையெழுத்திடப்படும்.

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு ஏற்ப இந்த முடிவுகள் அமைந்திருப்பதாகவும் சரவணன் தெரிவித்தார்.

ஓர் இல்லத்திற்கு ஒரு வீட்டுப் பணியாளர், அனைத்து விண்ணப்ப விவகாரங்களையும் ஒரே சாளரம் வழியாகக் கையாள்வது, நிர்ணயிக்கப்பட்ட ஒரே அளவிலான சம்பளம் ஆகிய அம்சங்களும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இருநாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் தருவிப்பு சம்பந்தப்பட்ட முதல் ஒப்பந்தம் 2006-இல் பாலி நகரில் கையெழுத்திடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் திருத்தப்பட்டு மீண்டும் 2011-இல் இந்தோனிசியாவின் பாண்டுங் நகரில் கையெழுத்தானது.

வீட்டுப் பணியாளர்களைத் தருவிப்பதற்கான செலவினங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்படும்.இதன் மூலம் விமானப் பயண செலவுகள், கோவிட்-19 காரணமாக தனிமைப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் தொடர்பான செலவினங்களை காலத்திற்கேற்ப மறு ஆய்வு செய்ய இயலும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அடுத்த ஒரு வாரத்திற்குள் 10 ஆயிரம் தொழிலாளர்கள் மலேசியாவுக்குள் கொண்டு வரப்படுவர்.

தோட்டத் தொழில் துறைகளுக்காக 10 ஆயிரம் தொழிலாளர்கள் இந்தோனிசியாவிலிருந்து வரவழைக்கப்படுவர்.

தோட்டத் தொழில் துறைகளுக்காக 32 ஆயிரம் தொழிலாளர்களை மலேசியாவுக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்க அமைச்சரவை முடிவுக்கு ஏற்ப இந்தோனிசியத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.