Home இந்தியா பஞ்சாப்பில் ஆட்சி அமைத்து சாதனை படைக்கிறது ஆம் ஆத்மி!

பஞ்சாப்பில் ஆட்சி அமைத்து சாதனை படைக்கிறது ஆம் ஆத்மி!

804
0
SHARE
Ad

புதுடில்லி : இதுவரையில் டெல்லியில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, இப்போது முதன் முறையாக டெல்லிக்கு வெளியே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் இன்று வியாழக்கிழமை (மார்ச் 10) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன.

அந்த முடிவுகளின்படி பஞ்சாப்பின் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 தொகுதிகளி வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் பஞ்சாப்பைக் கைப்பற்றக் கூடும் என்ற ஆரூடங்கள் கூட எழுந்த வேளையில் மீண்டும் மோசமான தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

பாஜக இதுவரையில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் பாஜக மோசமான தோல்விகளைப் பெற்றதற்குக் காரணம், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக அபார வெற்றி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் மீண்டும் உ.பி.முதல்வராகப் பதவியேற்கிறார்.

மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 273 தொகுதிகளை பாஜக வெற்றி கொண்டிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது என தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி இதுவரையில் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமானத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

இந்த முறை பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் காங்கிரஸ் கட்சி படுமோசமானத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

இதற்கிடையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமஜ்வாடி கட்சி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமஜ்வாடி கட்சி உருவெடுத்திருக்கிறது.

மாயாவதி தலைமையிலான பிஎஸ்பி கட்சியும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னணி வகித்து மோசமான தோல்விகளைத் தழுவியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய அந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாகத் தொடர்ச்சியாக ஆட்சி அமைக்கும் சாதனையை பாஜக புரிந்திருக்கிறது.