Home நாடு “நஜிப், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை விரைந்து நடத்தச் சொல்கிறார்” – ரபிசி சாடல்

“நஜிப், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை விரைந்து நடத்தச் சொல்கிறார்” – ரபிசி சாடல்

521
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “வழக்குகளை எதிர்நோக்கி வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளார். விரைவில் பெவிலியனில் உள்ள அவரது சொகுசு குடியிருப்பில் இருந்து சிறைக்கு மாறும் வாய்ப்பு நெருங்குகிறது. எனவே, நஜிப் அரச மன்னிப்பைப் பெறும் நோக்கில் பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோருகிறார்” என்று ரபிசி ரம்லி கூறியிருக்கிறார்.

மலேசியாகினியிடம் பேசிய பிகேஆர் துணைத் தலைவருமான ரபிசி இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் அவரே தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கருதலாம் என்றும் கூறினார்.

“அடுத்த தேர்தலில் புத்ராஜெயாவில் அம்னோவை மீண்டும் நிறுவ முடியும் என்று நஜிப் நம்புகிறார். மேலும் அவரது இறுதி முறையீட்டிற்கு முன் கட்சி அவருக்கு அரச மன்னிப்புக்காக அழுத்தம் கொடுக்கும். முரண்பாடு என்னவென்றால், அவர் தனது ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்காக பணம் எதையும் திருடவில்லை என்று பொய் சொல்ல முடியும். முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அவரது உந்துதல், குற்றத்தை மறைமுகமாக ஒப்புக்கொள்வது போலாகும். அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மன்னிப்பைப் பெறுவதற்கான அவரது உத்தியை உறுதிப்படுத்துகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பரில், மேல்முறையீட்டு நீதிமன்றம் எஸ்ஆர்சி (SRC) இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பின் 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது, ஆனால் கூட்டரசு நீதிமன்றத்தில் அவரது இறுதி மேல்முறையீடு விசாரணைக்காக இன்னும் காத்திருக்கிறது.

நஜிப்பும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணையில் உள்ளனர், சமீபத்திய தேசிய முன்னணி மாநாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர்.

முன்னாள் பிரதமர் நஜிப் தனது உரையில், பணவீக்கம் அல்லது சுயநலம் காரணமாக தேர்தல் நிறுத்தப்படக்கூடாது என்றார்.

நஜிப்-ஹமிட் ஜோடி “கோர்ட் கிளஸ்டர்” – அதாவது நீதிமன்றக் குழு – என அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தங்களின் சுயலாபத்தை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையைத் தொடர்கிறார்கள்.

“நஜிப்பும் சாஹிட்டும் அச்சத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது. அம்னோவில் பிளவுகள் மற்றும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்த அவர்கள் தயாராக உள்ளனர். அரசாங்கத்தில் இருக்கும் போது அவர்கள் செய்த செயல்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்” எனவும் ரபிசி கூறினார்.

“ஆனால், பிரதமர் தலைமையிலான அம்னோவின் அமைச்சரவைக் குழு முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு எதிரானது என்பது பகிரங்கமான ரகசியம்,” என்று அவர் மேலும் கூறினார்.