Home நாடு மஇகா தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு பிரதமர்

மஇகா தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு பிரதமர்

696
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 1973-ஆம் ஆண்டில் மஇகா கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா நடைபெற்றபோது அந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்க மஇகா தலைமையகம் வந்தவர் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக்.

அதன் பின்னர் நாடு எத்தனையோ பிரதமர்களைக் கண்டாலும் ஆளும் தேசிய முன்னணியின் ஓர் அங்கமாக மஇகா திகழ்ந்தாலும் எந்தப் பிரதமரும் மஇகா தலைமையகம் வந்ததில்லை. 50 ஆண்டுகால அந்த இடைவெளியை இன்று பூர்த்தி செய்தார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மஇகாவினர் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு மட்டும் பிரச்சாரம் செய்கின்றனர் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர்களைப் புறக்கணிக்கின்றனர் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த தருணத்தில், மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்தார் அன்வார்.

#TamilSchoolmychoice

மஇகாவின் பங்களிப்புக்கு பாராட்டும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் மஇகா தலைவர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்கள் அனைவருக்கும் பிரச்சாரம் செய்து ஆதரவு தேடுவர் என அறிவித்தார்.

நேதாஜி மண்டபத்தில் குழுமியிருந்த மஇகா தலைவர்களிடையே அன்வார் உரையாற்றினார்.

அம்னோ சார்பில் அமைச்சராக, துணைப்பிரதமராக இருந்தபோதும் அன்வார் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்ததில்லை. அதன்பின்னர் தேசிய முன்னணியை எதிர்த்து நடத்திய அரசியல் போராட்டத்தால் மஇகாவுடனும் அவருக்கு சுமுகமான உறவு இருந்ததில்லை.

இப்போது ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் தேசிய முன்னணியும் இணைந்துள்ளதால் – அந்தக் கூட்டணியில் மஇகாவும் இருப்பதால் – ஒற்றுமை அரசாங்கத்தின் செயலவைக் கூட்டங்களில் – மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு வருகிறார்.

மஇகா, சட்டமன்றத் தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்கள் பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான் இன்று அன்வார் நேரடியாக மஇகா தலைமையகம் வந்து, கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டார்.