Home நாடு மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு திருப்புமுனை : நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவல் மலாய் மொழியில் வெளியீடு...

மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு திருப்புமுனை : நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவல் மலாய் மொழியில் வெளியீடு காண்கிறது

636
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக ம.நவீன் எழுதிய சமூக நாவலான ‘சிகண்டி’ மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு காணவிருக்கிறது.

இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன என்றும் இந்த நாவலின் பதிப்பகமான FIXI நாவலை வாங்குவதற்கான முன்பதிவு திட்டத்தை அறிவித்துள்ளது என்றும் அந்த மகிழ்ச்சியான தகவலை நாவலாசிரியர் ம.நவீன் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மலேசியாவில் தமிழ்ப் புனைவுகள் மலாய் மொழியில் நூல்களாக வந்துள்ளன. மா. இராமையா, சி.வடிவேல் போன்றவர்கள் எழுதிய படைப்புகளின் மொழியாக்கங்கள் அதற்கான முன் உதாரணங்கள். ம.நவீனின் சில சிறுகதைகளும் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால் இவை அனைத்தும் எழுத்தாளர்களாக முன்வந்து தங்களின் சொந்தப் பணத்தைச் செலவு செய்து சுய ஆர்வத்தில் முன்னெடுக்கும் முயற்சிகளாகும்.

ஆனால் சிகண்டி மலேசியாவின் முதன்மை பதிப்பகங்களில் ஒன்றான FIXI மூலம் தேர்வு செய்யப்பட்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டு அவர்களே நூலாக வெளியிட முன்வந்துள்ளனர்.

மலேசியாவில் இப்படி ஒரு முயற்சி நடப்பது வரலாற்றில் இதுவே முதன் முறை எனக் கருதப்படுகிறது.

தனது எழுத்துலகப் பயணத்தில் இதனை பெருமைக்குரிய ஒரு தருணமாகக் கருதுவதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.

சிறந்த மலேசியத் தமிழ் இலக்கியங்கள் இனி தொடர்ந்து மலாய் மொழியில் வெளிவர இது ஒரு தொடக்கமாக அமையலாம். இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கும் FIXI பதிப்பகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, நாவலை மொழி பெயர்த்த நண்பர் சரவணனுக்கும் நவீன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.