Home நாடு கெமாமான் இடைத் தேர்தல் – 70% வாக்களிப்பு எதிர்பார்ப்பு

கெமாமான் இடைத் தேர்தல் – 70% வாக்களிப்பு எதிர்பார்ப்பு

437
0
SHARE
Ad
அகமட் சம்சூரி மொக்தார்

கெமாமான் : இன்று சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. சுமார் 70 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 10.00 மணிவரை 18 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

49 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 244 வரிசைகள் வாக்காளர்கள் வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தேர்தல் முடிவுகள் இரவு 9.00 மணிக்குள்ளாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரெங்கானு மந்திரி பெசார் பாஸ் வேட்பாளர்

இங்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி- பாஸ் சார்பில், திரெங்கானு மாநில மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தார் போட்டியிடுகிறார்.

எதிர்காலத்தில் அகமட் சம்சூரி பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆகலாம் என கெமாமான் பிரச்சாரங்களின்போது பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கோடி காட்டியிருந்தார்.

53 வயதான சம்சூரி பாஸ் கட்சியின் 3 உதவித் தலைவர்களில் ஒருவராவார். திரெங்கானு பாஸ் கட்சியின் துணை ஆணையருமாவார்.

இயந்திரவியல் துறையில் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்ற சம்சூரி பாஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி அம்னோ வேட்பாளர்

தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் அம்னோவின் வேட்பாளரான  டான்ஸ்ரீ ராஜா முகமட் அஃபாண்டி ராஜா முகமட் நூர் ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதியாவார். ராஜா முகமட் வெற்றி பெற்றால் அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல் முக்கியப் பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படும் என அன்வார் இப்ராகிம் கெமாமானில் பிரச்சாரம் செய்தபோது குறிப்பிட்டார்.

கெமாமான் வாக்காளர்கள் தங்கள் மாநில மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பார்களா – அல்லது நமது நாட்டுக்காக உழைத்த ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதிக்கு வாக்களிப்பார்களா? என்ற கேள்விகளோடு கெமாமான் வாக்களிப்பு தொடர்கிறது.