Home நாடு ஜேய்ன் ராய்யான் கொலை : 228 அண்டை வீட்டாரிடம் மரபணு மாதிரிகள் சேகரிப்பு

ஜேய்ன் ராய்யான் கொலை : 228 அண்டை வீட்டாரிடம் மரபணு மாதிரிகள் சேகரிப்பு

271
0
SHARE
Ad

 

ஜேய்ன் ராய்யான் அப்துல் மாட்டின்

பெட்டாலிங் ஜெயா : 6 வயது கொண்ட – ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட – ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அந்தக் கொலை தொடர்பான துப்பறிதலை மலேசியக் காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆகக் கடைசியான நடவடிக்கையாக ஜேய்ன் ராய்யான் குடியிருந்த டாமன்சாரா டாமாய் வட்டாரத்தின் இடாமான் அடுக்கக குடியிருப்பைச் சேர்ந்த 228 நபர்களிடம் இருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

வீடுவீடாகச் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மரபணு மாதிரிகளும் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்டன என்றும் மிக விரிவான நடவடிக்கை இது என்றும் சிலாங்கூர் காவல் துறை தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) காலை வரை 5,628 நபர்களும் 2,484 இல்லங்களும் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அந்த வட்டாரத்தில் 18 அடுக்கக குடியிருப்புகள் இருக்கின்றன.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 278 காவல் துறை அதிகாரிகள் ஜேய்ன் ராய்யான் கொலைவழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்தது.

ஜேய்ன் ராய்யானின் கொலை செய்யப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மோப்பம் பிடிக்க மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) ஜேய்ன் ராய்யான் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டான். அதன் பின்னர் தேடுதல் வேட்டை தொடங்கியது. அடுத்த நாள் அந்தச் சிறுவனின் உடல் அவனின் இல்லத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் ஜேய்ன் ராய்யான் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்தனர்.