Home Photo News உலகின் மிகப்பெரிய அனைத்துலக எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

உலகின் மிகப்பெரிய அனைத்துலக எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

306
0
SHARE
Ad

பிரிஸ்பேன் : கடந்த 65 ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் அனைத்துலக எழுத்துருவியல் இயக்கமான எ.டைப்.ஐ, ஆண்டுதோறும் இத்துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு மாநாட்டை நடத்தி வருகிறது. இவ்வாண்டு இம்மாநாடு ஆசுத்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மாநகரில் ஏப்பிரல் 17ஆம் நாள் முதல் நடந்து வருகிறது.

தமிழ் உட்பட தெற்காசிய தென்கிழக்காசிய மொழிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்கிவரும் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் மாநாட்டின் முதல் நாளில் முக்கியமான ஓர் உரையை ஆற்றினார். இந்த மொழிகளுக்கான எழுத்துருவாக்கக் கட்டமைப்பு குறித்தும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான சவால்கள் குறித்தும், அந்தச் சவால்களை எதிர்கொள்ள கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் கண்டு வரும் தீர்வுகள் குறித்தும் முத்து நெடுமாறன் எடுத்துரைத்தார்.

எழுத்துருவாக்கச் செயலிகள் பெரும்பாலும் இலத்தீன் எழுத்துருவாக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மிஞ்சினால் சீனம், ஜப்பான், கொரிய மொழிகள். இந்த மொழிகளுக்கான கட்டமைப்பும் தெற்காசிய தென்கிழக்காசிய மொழிகளுக்கான கட்டமைப்பும் மாறுபட்டவை.

#TamilSchoolmychoice

இந்திய, இந்தோசீன, இந்தோனீசிய மொழிகள் அனைத்தும் ஒரே மூல வரிவடிவத்தில் இருந்து வந்தவை என்பதால் இவற்றுக்கு ஓர் ஒருமைப்பாடு உள்ளது. அந்த ஒருமைப்பாட்டை முன்வைத்தே முத்து நெடுமாறன் உருவாக்கிய ஐபிசுகஸ் (செம்பருத்தி) எனப்படும் செயலி எழுத்துருக்களை செப்பமிட உதவுகிறது.

இதனை விளக்கி, சில பயன்பாட்டுச் செயல்முறைகளை தெளிவாக விளக்கினார் முத்து நெடுமாறன். மேலும், அவர் அடிப்படை அமைத்து வரும் அடுத்தக் கட்ட மேம்பாடு குறித்தும் செயல்முறைக் காட்சி வழி விளக்கினார். அவரின் உரை உலகெங்கிலும் இருந்து வந்திருந்த பேராளர்கள் அனைவரையும் கவர்ந்தது. மாநாடு சனிக்கிழமை, 20-ஆம் நாள் நிறைவுபெறும்.