Home நாடு ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனைக் கூடம் மலேசியாவில் ஜூன் 22-இல் தொடக்கம்!

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனைக் கூடம் மலேசியாவில் ஜூன் 22-இல் தொடக்கம்!

284
0
SHARE
Ad

கோலாலம்பூர் : உலக அளவில் கைப்பேசிகள், கையடக்கக் குருவிகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகவும், பங்குச் சந்தையில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் ஆப்பிள் எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தன் முதல் விற்பனைக் கூடத்தைத் திறக்கவிருக்கிறது.

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் வட்டாரத்தில் அமைந்துள்ள தி எக்ஸ்சேஞ்ச் டிஆர்எக்ஸ் மால் (The Exchange TRX mall) வணிகப் பேரங்காடியில் ஆப்பிள் விற்பனைக் கூடம் அமையவிருக்கிறது.

தென் கிழக்காசியாவில் தங்களின் வணிக ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த விற்பனைக் கூடம் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தென்கிழக்காசியா வருகையின் ஒரு பகுதியாக இந்தோனிசியா, சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு வருகை தந்தார்.

#TamilSchoolmychoice

ஆப்பிள் சாதனங்கள் இதுவரையில் அந்நிறுவனத்தின் முகவர்கள் (ஏஜெண்ட்) மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போதுதான் முதன் முறையாக நேரடியாக விற்பனைக் கூடத்தை ஆப்பிள் தொடங்கியுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஆப்பிள் ஏற்கனவே விற்பனைக் கூடங்களை இயக்கி வருகிறது.

தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகிய முனைகளில் மலேசியா ஆப்பிளுக்கு முக்கியத் தளமாக மாறி வருகிறது.

அமெரிக்க நிறுவனமான, ஆப்பிள் தனது மேக் கணினிகளின் சில ரகங்களை மலேசியாவிலேயே சில ஆண்டுகளாக தயாரித்து வருகிறது.  இந்தியாவில் ஐபோன் கைப்பேசிகளையும் வியட்னாமில் ஏர்போட் என்னும் செவிவழி பயன்படுத்தும் ஒலிவாங்கிகளையும் ஆப்பிள் தயாரித்து வருகிறது.