Home இந்தியா இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு – ஸ்டாலினும் செல்கிறார்

இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு – ஸ்டாலினும் செல்கிறார்

212
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியப் பொதுத் தேர்தலின் இறுதிக்கட்டமாக நடைபெறும் 7-வது கட்ட வாக்களிப்பு இன்று சனிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலையே வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் வெளியிடத் தயாராகி வருகின்றன.

இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் புதுடில்லியின் கூடுகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பெரும்பான்மை கிடைத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் யார் பிரதமர்? எந்தக் கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்? என்பதுபோன்ற விவகாரங்கள் மீதான பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்து இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த 3 நாட்களில் புதிய பிரதமரைத் தேர்வு செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்தார்.

திமுகவுக்கு 4 அமைச்சர்கள் கேட்பார் ஸ்டாலின், என்றொரு ஊடகத் தகவலும் உலவுகிறது. அப்படியே இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் திமுகவின் சார்பில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அமைச்சர்களாவார்கள் (தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றால்!) என எதிர்பார்க்கலாம்!

தவிர்க்கும் மமதா பானர்ஜி…வியூகமா?

இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது என  அறிவித்து விட்டார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி. இன்றைய இறுதிக்கட்ட வாக்களிப்பில் மேற்கு வங்காளத்தின் சில தொகுதிகளில் வாக்களிப்பு நடப்பதால் அது எனக்கு முக்கியம் என்கிறார்.

உண்மையிலேயே அதுதான் காரணமா? அல்லது அடுத்த மூன்றாவது நாளில் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் – பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் வலுத்து வரும் நிலையில் – ஏன் இவர்களோடு சேர்ந்து மோடியின் பகைமையை சம்பாதிக்க வேண்டும் என்ற வியூகமா? என்பது தெரியவில்லை!