இலண்டன்: இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கான மின்சக்தி வழங்கும் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 21) முழுவதும் அந்த விமான நிலையம் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1,350-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று இலண்டன். நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றன அல்லது கடந்து செல்கின்றன. இலண்டன் விமான நிலையம் மூடப்பட்டதால் உலகில் மற்ற பல முக்கிய விமான நிலையங்களிலும் விமான சேவைகள் தடைப்பட்டன. பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
விமான நிலையம் மூடப்பட்டதால் மில்லியன் கணக்கான பவுண்ட் மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பயங்கரவாதம் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் தற்போதைக்கு எதிர்பாராத விபத்து என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வந்துள்ளனர்.
இலண்டன் விமான நிலையம் மூடப்பட்டதால் பயணங்களைத் தொடர முடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.