Home இந்தியா என்.எல்.சி. பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்: கருணாநிதி

என்.எல்.சி. பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்: கருணாநிதி

336
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 10- நெய்வேலி நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பது குறித்து, தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நெய்வேலி நிறுவனத்திலே இயங்கி வரும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமுகமாக எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. நெய்வேலி நிறுவன தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த பிரச்சினை குறித்து நான் கடந்த 4-ந் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு, ‘நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கின்ற முடிவினை கைவிட ஆவன செய்ய வேண்டும்’ என கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். இதே போன்ற கடிதங்களை பிரதமருக்கும், மத்திய நிதி மந்திரிக்கும் அனுப்பினேன்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நாள்தோறும் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.63 முதல் ரூ.3.37 வரை தமிழகம் மற்றும் தென் மாநிலங்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்கிறது.

karuna-cabinet-1805_630தமிழக அரசு இந்த பிரச்சினையில் ஒரு முடிவு காண வேண்டும் என்பதற்காக, பொதுமக்களுக்கு விற்பதற்கு பதிலாக 5 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசின் சான்றிதழ் பெற்ற நிதி நிறுவனத்திற்கு அளித்தால் வாங்கி கொள்ளத் தயார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், அந்த 5 சதவீத பங்குகளை அரசு நிறுவனம் வாங்கும் கணக்கில்தான் எடுத்துக்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை குழுமம் (செபி) அறிவித்துள்ளது.

‘‘செபியின் இந்த அறிவிப்பில் இருந்து, ஏற்கனவே எல்.ஐ.சி.யில் விற்கப்பட்ட 1.44 சதவீதத்துடன் தமிழக அரசுக்கு அளிக்க உள்ள 5 சதவீத பங்கு விற்பனையையும் சேர்த்து 6.44 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் நிதி நிறுவன கணக்கில் மட்டும் செல்லுமே தவிர, ‘செபி’யின் முடிவான 10 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு, அதாவது ஏற்கனவே 5 சதவீதம் தொழிலாளர்களுக்கு விற்றது போக, மீதமுள்ள 5 சதவீதத்தை விற்பனை செய்ய வேண்டும் என்ற தன்னுடைய நிலையை ‘செபி’ மாற்றிக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது’’ என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மு.சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள கருத்து ஆழ்ந்து பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

எனவே, தமிழக அரசு வாங்க முன்வந்துள்ள 5 சதவீத பங்குகளை அரசு நிறுவனங்கள் வாங்கும் பங்குகள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விதிவிலக்கு அளித்து, பொதுமக்களுக்கு விற்கப்படும் பங்குகள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், மின் பற்றாக்குறை நீடித்து வரும் இந்த காலக்கட்டத்தில், ஏற்கனவே மின் உற்பத்தி செய்து வந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் காரணமாக, மின் உற்பத்தி தடைபடுவதில் இருந்து மீட்கவும், நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி கருதி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், மத்திய, மாநில அரசுகள் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, பங்கு விற்பனை பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.