Home அரசியல் இன்று பழனிவேல்-சரவணன் முக்கிய சந்திப்பா? திசை மாறும் ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல்!

இன்று பழனிவேல்-சரவணன் முக்கிய சந்திப்பா? திசை மாறும் ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல்!

504
0
SHARE
Ad

Palany-Subra-Saravananஆகஸ்ட் 5 ம.இ.காவில் தேசியத் தலைவருக்கான தேர்தல் பரபரப்புகள் பரவி வரும் இந்த நேரத்தில், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணனும் இன்று முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றார்கள் என்றும், இந்த சந்திப்பால் கட்சியின் தேசிய நிலையிலான தேர்தல்களில் முக்கியமான, எதிர்பாராத திருப்புமுனைகள் நிகழலாம் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் கோடிகாட்டியுள்ளன.

#TamilSchoolmychoice

கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையில் நிகழும் ஒரு சாதாரண சந்திப்புதான் இது என ஒரு சாரார் கூறினாலும், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் கருதுகின்றார்கள்.

காரணம், பழனிவேலுவுக்கு எதிராக டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவர் தேர்தலில் களம் காண்பார் எனக் கூறப்பட்டாலும், அத்தகைய தேர்தல் முன்னேற்பாடுகளில் முதல் நிலை தளபதியாக முன்னணி வகிப்பவர் சரவணன்தான்.

பழனிவேலுவுக்கு எதிரான கருத்துக்களை ஆணித்தரமாகவும், ஆழமாகவும் பிரச்சாரம் செய்து வருவதோடு, டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவருக்குப் போட்டியிட்டால், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் சரவணன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சரவணனின் ஆதரவு இல்லாமல், டாக்டர் சுப்ரமணியம் தனித்து அரசியல் ரீதியாக இயங்க முடியாது, தேசியத் தலைவர் தேர்தல் களத்தில் பழனிவேலுவுக்கு எதிராக தனியாகவும் குதிக்கமுடியாது என்ற இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பழனிவேல்-சரவணன் சந்திப்பு அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுமா?

இந்த சூழ்நிலையில்தான் இன்றைக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பழனிவேல்-சரவணன் சந்திப்பு நிகழ்வதாக கூறப்படுகின்றது.

பழனிவேல்-சரவணன் இருவருக்கும் இடையில் இன்றைய சந்திப்பிற்குப் பிறகு இணக்கப் போக்கு ஏற்பட்டால், அதனால் தேசியத் தலைவர் தேர்தலுக்கான பரபரப்பு சற்றே அடங்கும் என்பதோடு, டாக்டர் சுப்ரமணியமும் தேசியத் தலைவருக்குப் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு ஏற்றாற்போல் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையில், யாருடைய நெருக்குதலோ, மிரட்டலோ இல்லாமல், எந்த பதவிக்கு போட்டியிடுவது என்பது குறித்து தான் சுயமாக முடிவெடுக்கப் போவதாக டாக்டர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

தேசியத் தலைவருக்கான தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதிலும் உள்ள ம.இ.கா கிளைத் தலைவர்களை டாக்டர் சுப்ரமணியம் சந்தித்து வருகின்றார்.

இந்நிலையில், எந்தப் பதவிக்கு அவர் போட்டியிடப் போகின்றார் என்பதை அறிவிக்கவேண்டும் என்ற நெருக்குதல்கள் ம.இ.கா வட்டாரங்களில் அவருக்கு அதிகரித்து வருகின்றன.