Home நாடு குர்பான் விவகாரம்: “இஸ்லாம் மதம் சார்ந்த விவகாரங்களில் தலையிட வேண்டாம்” – பெர்காசா எச்சரிக்கை

குர்பான் விவகாரம்: “இஸ்லாம் மதம் சார்ந்த விவகாரங்களில் தலையிட வேண்டாம்” – பெர்காசா எச்சரிக்கை

619
0
SHARE
Ad

Ibrahim-Ali-feature---2கோலாலம்பூர், அக் 28 – பள்ளிகளில் ‘குர்பான்’ கொடுப்பதற்கு எதிராக துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் கருத்துத் தெரிவிப்பாரானால் இந்த விவகாரத்தை சுல்தானிடம் எடுத்துச் செல்லட்டும் என்று பெர்காசா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி கூறுகையில், “இது போன்ற சடங்குகள் நடப்பது இஸ்லாமிய கலாச்சாரங்களில் ஒன்று. இது போன்ற விவகாரங்களில் ம.இ.கா தலைவர்கள் யாரும் இனி தலையிடமாட்டார்கள் என்று நம்புகின்றேன். இல்லையென்றால் அது நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும். கமலநாதன் இந்த விவகாரத்தை ஆட்சியாளர்கள், மாநிலத் தலைவர்கள் (சமயத் தலைவர்கள்) ஆகியோருடன் கலந்தாலோசிப்பது நல்லது” என்று தெரிவித்தார்.

மதம் சார்ந்த விவகாரங்களில் தலையிட வேண்டாம்

#TamilSchoolmychoice

இஸ்லாமிய சமயத்தின் படி பள்ளிகளில் மாடு பலி கொடுப்பது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு சடங்கு தான். எனவே இதை இந்து சமுதாயத்தினர் பெரிய பிரச்சனையாக ஆக்க வேண்டாம் என்றும் இப்ராகிம் அலி தெரிவித்தார்.

“இது ஒன்றும் புதிது அல்ல, எனவே இந்திய சமுதாயத்தினர் இதை பெரிது படுத்த வேண்டாம். இந்திய சமுதாயத்தின் மத விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்று நினைத்தால், இஸ்லாமின் மத விவகாரங்களில் தலையிட வேண்டாம்”  என்று இப்ராகிம் அலி தெரிவித்தார்.

எனினும், “இது போன்ற மத சார்ந்த சடங்குகளை பொதுவான இடங்களில் நடத்தாமல் அவரவர் சொந்த இடங்களிலோ அல்லது வழிபடும் இடங்களிலோ நடத்துவது தான் இந்த நாட்டில் இருக்கும் சமயங்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். இது எல்லா மதத்தினருக்கும் நல்லதும் கூட” என்றும் இப்ராகிம் அலி குறிப்பிட்டார்.

அண்மையில், புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு  சிலாங்கூர் எஸ்கே பூச்சோங் ஜெயா பள்ளியில் மாணவர்கள் முன் மாடு பலியிடப்பட்டது குறித்து வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, ‘குர்பான்’ என்று அழைக்கப்படும் கால்நடைகளை பலியிடும் சமய நிகழ்வுகளை பள்ளிகளில் செய்ய அனுமதியில்லை என்று துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.