Home இந்தியா தேவயானி கைதுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு !

தேவயானி கைதுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு !

502
0
SHARE
Ad

Devayani.u-s-15

புது டில்லி, டிசம்பர் 30- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக இரு தரப்பு தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த வாரம் வாஷிங்டனில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்ற உடன் செய்த முதல் காரியமாக, தேவயானி மீதான கைது நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் வென்டி ஷெர்மேன், நிர்வாக துணை செயலாளர் பேட்ரிக் கென்னடி ஆகியோரை வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப்பேசினார்.

அப்போது அவர் தேவயானியை கைது செய்தது, ‘வியன்னா உடன்படிக்கை’யை மீறிய செயல் என்பதை தெளிவுபடுத்தினார். மேலும் தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். தேவயானி விவகாரத்தில் மரியாதைக்குரிய விதத்தில் ஒரு தீர்வினை அமெரிக்கா காணாதது வரையில், இரு தரப்பு தூதரக உறவில் நிலவி வருகிற முட்டுக்கட்டை தொடரும் என உறுதிபட கூறினார்.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் இல்லாத அளவுக்கு இந்தியா இந்த பிரச்சினையில் இப்படி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்தியாவின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இது நாங்கள் எதிர்பாராத ஒன்று” என கூறினார்.

இந்த நிலையில் இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்கு அமெரிக்கா இப்போது பணியத்தொடங்கி உள்ளது. தேவயானி விவகாரத்தில் சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள தவறுகளை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆணையம், வெளியுறவுத்துறை, நீதித்துறை ஆகியவை ஆய்வு செய்து வருகின்றன.

இதை அமெரிக்க அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதுபற்றி அந்த வட்டாரங்கள் கூறுகையில், “இந்த வழக்கில் நடந்துள்ள தவறுகள் என்னென்ன என்பதை அமெரிக்க அரசு துறைகள் பரிசீலிக்கின்றன. இந்த விவகாரத்தை கையாண்டதில் தவறுகள் நடந்திருப்பதை மவுனமாக ஏற்றுக்கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. இந்த பிரச்சினையை கூடிய விரைவில் சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை 24 மணி நேரமும் வேலை செய்து வருகிறது” என்றன.