Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

361
0
SHARE
Ad

sep-22-election-comisionபுதுடெல்லி, மார் 5 – மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. ஏப்ரல் 7 முதல் 10-ஆம் தேதிக்குள் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 15-வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே, மே 31-ஆம் தேதிக்குள் புதிய மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த  தேர்தல் ஆணையம் பல மாதங்களாக ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த ஏற்பாடுகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு விட்டதை தொடர்ந்து, தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று காலை 10.30மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில்  தேர்தல் தேதி  எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இதை 6 கட்டங்களாக குறைப்பது பற்றியும் கடைசி நேர முயற்சியாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் கூறின.

#TamilSchoolmychoice

முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7 முதல் 10-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது மேலும், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

மக்களவை தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடக்கவுள்ளது. பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளும், மார்க்சிஸ்ட் தலைமையிலான 3-வது அணியும் தேர்தல் களம் காணவுள்ளன. தேர்தல் தேதி நெருங்கி விட்ட நிலையிலும் இன்னும் பல மாநிலங்களில் பாஜக,  காங்கிரஸ் கூட்டணி முடிவாகாமல் இழுபறியில்லுள்ளது.

இருப்பினும், இக்கூட்டணிகள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பிரசாரத்தில் இன்னும் பரபரப்புக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கட்சிகள், கோடை வெயிலின் கொடுமையை தவிர்க்கும் விதமாக, தேர்தலை முன்கூட்டியே தொடங்கும்படி கோரிக்கை வைத்தன. இதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.