Home இந்தியா தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டி!

தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டி!

375
0
SHARE
Ad

jayalalithaசென்னை, மார் 6 – அ.தி.மு.க.- கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே தனித்துப் போட்டியிடுவது என, அக்கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்ததால், நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை முடிவு செய்ய, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என, அக்கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி உண்டு என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகள் மற்றும் அ.தி.மு.க. இடையேயான முதல் சுற்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கிறது. தொகுதி உடன்பாடு எட்டப்பட்டால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு, அறிவிக்கப்பட்ட  அ.தி.மு.க., வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவர் என, தெரிவித்தார். ஆனாலும், அ.தி.மு.க.வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளால் தொகுதி உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

இத்தகைய தர்மசங்கடமான சூழ்நிலையில் நேற்று முன் தினம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூடி அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்பாக விவாதித்தது. தொகுதி உடன்பாட்டுக்கு காத்திருப்போம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் இரு நாள் மாநிலக்குழு கூட்டம், செவ்வாயன்று கூடியது. நேற்று இரவு வரை அக்கூட்டம் நடந்தது.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்த அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டு குழுவினர், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிவுள்ளது என தெரிவித்துள்ளனர். கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்து வந்த நிலையில், திடீரென கூட்டணியில்லை என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது கம்யூனிஸ்டுகள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி எடுத்துள்ள முடிவு அரசியல் நாகரிகமற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்டுகள் கழற்றி விடப்பட்ட நிலையில், அவர்கள் தனித்துப் போட்டியிடுவரா அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பரா என்பது, இன்று தெரியும். அதற்காக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.