Home நாடு 13 நாடுகள்,57 கப்பல்கள், 48 விமானங்கள்! தேடும் பணி தொடர்கிறது! – ஹிஷாமுடின்

13 நாடுகள்,57 கப்பல்கள், 48 விமானங்கள்! தேடும் பணி தொடர்கிறது! – ஹிஷாமுடின்

445
0
SHARE
Ad

MH370-Search-and-rescue-300x199கோலாலம்பூர், மார்ச் 14 – மலேசிய விமானம் MH370 மாயமாகி இன்றோடு 7 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ஹிஷாமுடின் கூறியிருப்பதாவது:-

“இன்றோடு விமானம் மாயமாகி 7 நாட்கள் ஆகிவிட்டன. தேடுதல் பணி தொடர்ந்து தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றது. 13 நாடுகளைச் சேர்ந்த 57 கப்பல்கள், 48 விமானங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.”

#TamilSchoolmychoice

“அனைத்துலக நாடுகளுடன் இணைந்து விமானத்தை தேடுவது மட்டுமே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கின்றது. நமக்கு தேடலில் உதவும் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு என்றும் நன்றியுடைவர்களாய் இருப்போம்.”

“விமானத்தில் இருந்த பயணிகளின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மலேசிய மக்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்” இவ்வாறு ஹிஷாமுடின் கூறினார்.

புதிய தகவல்MAS (1)

காணாமல் போன விமானம் குறித்து பல்வேறு ஊடகங்கள் பல ஆரூடங்களை கூறி வருகின்றன என்று குறிப்பிட்ட ஹிஷாமுடின், விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னர் 4 மணி நேரம் வானில் பறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை மறுத்தார்.

“முறைப்படி இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள் உட்பட அனைத்துலக அதிகாரிகளிடம் கடந்த புதன்கிழமை தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேடுதல் பணி தொடர்கிறது. மற்றபடி, பெயர் வெளியிடாத அதிகாரிகள் கூறுவதை கருத்தில் கொண்டு தகவல்களை பொதுவில் வெளியிட முடியாது” என்றும் ஹிஷாமுடின் கூறினார்.

Indian oceanஅந்தமான், இந்தியப் பெருங்கடல் வரை தேடல்

இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானத்தை தேடும் பணி இந்தியப் பெருங்கடல் மற்றும் அந்தமான் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.

அதே நேரத்தில், தெற்கு சீன கடலிலும் கிழக்கே தேடும் படலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

“விமானத்தை விரைவில் கண்டுபிடிப்பது மட்டுமே நமது இலக்கு. அதனால் தான் தேடும் படலம் விரிவுபடுத்தப்படுகின்றது. எந்த ஒரு முடிவையும் வைத்து இதை செய்யவில்லை” என்று ஹிஷாமுடின் கூறினார்.

எஞ்சின் தகவல்

விமானத்தின் எஞ்சினில் இருந்து அதை பராமரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce ) நிறுவனத்திற்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பப்பட்டதாக ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஹிஷாமுடின் முற்றிலும் மறுத்தார்.

அது பற்றி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே இன்று தகவல் உண்மை இல்லை என அறிக்கை விட்டுள்ளதாக ஹிஷாமுடின் சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் படலம்unnamed (1)

“தென் சீன கடலில், விமானம் கடைசியாக தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 60 கடல் மைல்களுக்கு அப்பால், கடலில் இரண்டு இடங்களில் எண்ணெய் படலங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.”

“முதல் எண்ணெய் படலத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது, விமான எண்ணெயுடன் மிகச் சிறிதளவு ஒத்துப்போனது. ஆனால் அந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நிச்சயமாக அது MH370 உடையதாக இருக்காது என்று நம்புகின்றோம்.”

“இரண்டாவது எண்ணெய் படலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அது விமானத்தின் எண்ணெய் இல்லை என்று உறுதியாகிவிட்டது.” என்று ஹிஷாமுடின் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.