Home உலகம் லூப்தான்சா விமானிகள் வேலை நிறுத்தம்! 3,800 விமானங்கள் இரத்து!

லூப்தான்சா விமானிகள் வேலை நிறுத்தம்! 3,800 விமானங்கள் இரத்து!

516
0
SHARE
Ad

Lufthansaஜெர்மனி, ஏப்ரல் 2 – ஜெர்மனியின் லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்தின் 3,800 விமானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லூப்தான்சா விமான நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தத்தால், இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள 4,25,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்காவின் 17 விமான நிலையங்களுக்கு செயல்படும் இந்த நிறுவனத்தின் 134 விமானங்கள் இந்த மூன்று நாட்களில் ரத்து செய்யப்படுகின்றன.

#TamilSchoolmychoice

விமானிகளின் தொழிற்சங்கம் மற்றும் விமான நிறுவனத்திற்கிடையே ஊதியம் மற்றும் வேலை விதிமுறைகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கடந்த வாரமே வேலைநிறுத்தம் குறித்த முன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

லூப்தான்சாவின் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய வேலை நிறுத்தமாகும். இதனால் அந்நிறுவனத்தின் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் உட்பட மொத்தம் 500 விமானங்கள் மட்டுமே இன்று இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விமானங்களை லூப்தான்சாவின் மற்ற நிறுவனங்களான சுவிஸ் சர்வதேச நிறுவனம், ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் யூரோவிங்ஸ், லூப்தான்சா சிட்டி லைன், ஏர் டோலோமிடியின் ஆகியவற்றின் விமானிகள் இயக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தினால் லூப்தான்சா நிறுவனம் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை இழக்க நேரிடும், இருப்பினும் பாதிக்கப்படும் அனைத்துப் பயணிகளுக்கும் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து தரவும் முன்வந்துள்ளது.