உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி தொடர் சரிவைச் சந்தித்து வருவதால் உலக அளவில் பொருளாதார தேக்க நிலை உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி ஆகியவற்றிலிருந்து அந்நாடு இன்னமும் முழுமையாக மீளவில்லை என்பதையே பொருளாதார குறியீடுகள் காட்டுகின்றன.
2015-ம் ஆண்டில் விற்பனை வரியை உயர்த்துவது தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்டறிய, அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே (படம்) திட்டமிட்டிருந்தார். எனினும் அந்த நடவடிக்கை தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மிக அதிக அளவிலான கடன் சுமை உள்ள நாடாக ஜப்பான் திகழ்கிறது. இந்த சூழலில் ஜப்பானின் கடன் சுமையைக் குறைப்பதற்காக வரியை உயர்த்த அபே அரசு முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 சதவீதமாக இருந்த விற்பனை வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இரண்டாம் காலாண்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதம் குறைந்துள்ளது. தனியாரின் நுகர்வு பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 20 ஆண்டுகளில் ஜப்பானின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அதனை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பு ஷின்சோ அபே மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.