கோத்தாபாரு, டிசம்பர் 26 – வெள்ள நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்தபடியால் கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரம்புவான் சைனாப் மருத்துவமனையில் இருந்து நேற்று வியாழக்கிழமை அன்று நோயாளிகள் பலர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

வெள்ள நீர் முழங்கால் அளவுக்கு உயர்ந்ததன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் செல்வதே பாதுகாப்பாக இருக்கும் என முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோயாளிகளில் சிலர் குபாங் கெரியானில் உள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் வெள்ள நிலவரம் மேலும் மோசமடைந்து வருவதால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
“தற்போது மருத்துவமனையில் மின்சாரம் உள்ளது. ஆனால் வெள்ள அளவு அதிகரிக்குமாயின் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியிருக்கும்,” என மருத்துவமனை நிலவரம் குறித்து விவரம் அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளந்தானில் வெள்ள நிலவரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், அங்கு 153 நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.