நேற்று மதியம் பெஷாவர் அருகே ஹயாதாபாத் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் 3 தற்கொலைப் படை தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால் ஏராளமானோர் மசூதிக்கு வந்திருந்தனர். பாதுகாப்பு படையினர் சீருடையில் வந்த தீவிரவாதிகள் காவலாளியை சுட்டுக் கொன்றதுடன், மசூதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் ஒருவன் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துள்ளான். கையெறி குண்டுகளை வீசியும் தாக்கினர். அந்தப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்ததும், மக்கள் அலறியடித்துக் கொண்டு மசூதியிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.
இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்துக்கு தெக்ரிக்-இ-தலிபான் பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிபர் மம்னூன் உசேன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.