Home நாடு ஹூடுட் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து வழக்கு: முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம்

ஹூடுட் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து வழக்கு: முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம்

463
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 23 – ஹூடுட் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகப் போவதாக முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார். ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த கிளந்தான் அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று அறிவிக்கக் கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் மனு அளிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

Zaid-Ibrahim-Sliderகடந்த 2002ஆம் ஆண்டு பாஸ் ஆட்சி நடைபெற்ற கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்படுவதை எதிர்த்து இதேபோல் நீதிமன்றத்தை அணுகினார் சைட் இப்ராகிம். எனினும் பின்னர் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

“ஹூடுட் சட்டத்தை தனி நபர்களோ அல்லது அமைப்புகளோ எதிர்க்கும் பட்சத்தில் அவர்களுடன் சட்ட ரீதியாக இணையத் தயார். ஹூடுட் விவகாரம் ஓர் அரசியல் விளையாட்டு என்பதையும் மீறி இந்நாட்டின் ஒற்றுமைக்கும் அஸ்திவாரத்திற்குமே பேராபத்தாக உருவெடுத்துள்ளது.  நமது அரசியல் சாசனமே நமது அடையாளமாகும். எனவே அதை மீறும் விதமாக ஏதேனும் நடக்கும்போது அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஹூடுட் சட்டம் என்பது அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று,” என்று சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு ஹூடுட் சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று கூறப்படுவதை ஏற்க மறுத்துள்ள அவர், கிளந்தான் மக்கள் இச்சட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்பதை பாஸ் கட்சி நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.