Home நாடு ரொம்பின் இடைத்தேர்தல்: தேசிய முன்னணி வேட்பாளர் ஹாசான் அரிஃபின்

ரொம்பின் இடைத்தேர்தல்: தேசிய முன்னணி வேட்பாளர் ஹாசான் அரிஃபின்

517
0
SHARE
Ad

Hassan Ariffin Rompin Candidateமுவாட்சாம் ஷா, ஏப்ரல் 19 – ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளராக ஹாசான் அரிஃபின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

62 வயதான ஹாசன் அரிஃபின், ரொம்பின் தொகுதி அம்னோ துணைத் தலைவராக உள்ளார். அந்தத் தொகுதியின் அம்னோ தலைவராக இருந்த டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதை அடுத்து, தற்காலிக தலைவராகச் செயல்பட்டு வருகிறார் ஹாசான்.

ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ள ஹாசானுக்கு, பிறந்தநாள் பரிசாக அம்னோ தலைமையின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. ரொம்பினில் கூடியிருந்த ஏராளமான ஆதரவாளர்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப்புடனான ஆலோசனைக்குப் பிறகு ரொம்பினில் களமிறக்கப்பட ஹாசான்தான் சரியான தேர்வு என முடிவு செய்யப்பட்டதாக மொய்தீன்  தெரிவித்தார்.

“ஹாசான் மிகுந்த அனுபவமுள்ளவர். அடித்தள தொண்டர்களின் ஆதரவு உள்ளவர். பொதுமக்களின் குறைகளை காது கொடுத்து கேட்க விருப்பமுள்ளவர்,” என்றார் மொய்தீன்.

ரொம்பின் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 22ஆம் தேதி நடைபெறும். மே 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.

கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 15,114 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி அபார வெற்றி கண்டது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஏப்ரல் 4ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.