Home வணிகம்/தொழில் நுட்பம் வாடிக்கையாளரால் வெளிச்சத்திற்கு வந்த ‘பிளிப்கார்ட்டின்’ போலிச் சலுகைகள்!

வாடிக்கையாளரால் வெளிச்சத்திற்கு வந்த ‘பிளிப்கார்ட்டின்’ போலிச் சலுகைகள்!

462
0
SHARE
Ad

47555261புது டெல்லி, ஜூன் 8  –  இந்தியாவில் இணைய வர்த்தகம் நாளுக்கு நாள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் என நிறுவனங்கள் வரிசை கட்டி இந்தியா முழுவதும் தனது வர்த்தகத்தைப் பெருக்கி வருகின்றனர். இந்திய வர்த்தகம் பற்றி உணர்ந்த சீனாவின் பெரு நிறுவனமான ‘அலிபாபாவும்’ (Alibaba) இந்தியாவில் கால் பதிக்க தருணம் பார்த்துக் காத்திருக்கிறது.

இணைய வர்த்தகம் இந்தியாவில் பிரபலமாவதற்கு மிக முக்கியமான காரணம், அந்நிறுவனங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் வழங்கும் சலுகைகள் தான். 10 முதல் 80 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இணைய வர்த்தகத்தையே நாடுகின்றனர். நகரங்களில் மட்டும் தனது கிளைகளை விரித்து இருந்த நிறுவனங்கள் தற்போது சிறு நகரங்களுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் தனது வர்த்தகத்தைப் பரப்பத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், வாடிக்கையாளர் ஒருவர், பிளிப்கார்ட் நிறுவனம் போலித் தனமாக வெளியிடும் சலுகைகளை சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தி உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த மணி சங்கர் சென் என்ற அந்த வாடிக்கையாளர், பிளிப்கார்ட் தளத்தில் காலணி வாங்குவதற்காகப் பல்வேறு மாதிரிகளைப் பார்த்துள்ளார். அப்போது 799 ரூபாய் மதிப்புள்ள காலணி, சலுகை விலையில் 399 ரூபாய்க்கு விற்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அந்தக் காலணியின் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்த மணி சென் பெருத்த ஏமாற்றமடைந்தார். அந்தக் காலணியில் அதன் தயாரிப்பு விலையே 399 ரூபாய் என அச்சிடப்பட்டு இருந்து. இது குறித்துப் புகாரை உடனடியாகப் பிளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்த அவர், சமூக ஊடகத்திலும் அதனை ஆதரங்களுடன் குறிப்பிட்டார்.

இது குறித்துப் பதில் அளித்துள்ள பிளிப்கார்ட் , “நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தது.

இதற்கிடையே பிளிப்கார்ட் தளத்தின் இந்தப் போலியான அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. பலர் இந்தத் தளத்தைப் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.