Home உலகம் ஜப்பானில் ஓடும் ரயிலில் தற்கொலை முயற்சி – 2 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது!

ஜப்பானில் ஓடும் ரயிலில் தற்கொலை முயற்சி – 2 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது!

529
0
SHARE
Ad

bullet-train-japanடோக்கியோ, ஜூன் 30 – ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் ஒருவர் எண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியால், ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கடும் புகையினால் இருவர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இன்று காலை 11 மணி அளவில் (ஜப்பான் நேரப்படி) ஷின்கான்சென் ரயில் பாதையில், டோக்கியோவில் இருந்து மேற்கு நகரமான ஒசாகாவிற்குச் சென்று கொண்டிருந்த புல்லட் ரயிலில் பயணி ஒருவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது உடம்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயைப் பற்ற வைத்தார். இதனால் குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டி தீப்பிடித்து எரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கடும் புகை காரணமாக இரு ரயில் பயணிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்குப் பேர் பெற்ற ஜப்பான் மத்திய ரயில்வே நிர்வாகம், உடனடியாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரயிலில் தீ மேலும் பரவாமல், பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்டதாக டோக்கியோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, தற்கொலை முயற்சி மேற்கொண்ட அந்தப் பயணி யார்?, அவர் இந்த விபத்தில் என்ன ஆனார்?, அவரின் நோக்கம் தற்கொலை செய்து கொள்வதா? அல்லது தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டாரா? என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இது தொடர்பாக ஜப்பான் மத்திய ரயில்வே நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணியின் தற்கொலை எண்ணத்தினால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த ரயிலில் அவர் எவ்வாறு எரிபொருட்களைக் கொண்டு வந்தார் என விசாரித்து வருகிறோம். மேலும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பான் புல்லட் ரயில் வரலாற்றில், கடந்த 50 வருடங்களில் இத்தகைய அசம்பாவிதம் எதுவும் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.