Home இந்தியா அமெரிக்கா வரும் மோடியைப் புறக்கணிக்க அமெரிக்க வாழ் படேல் சமூகத்தினர் முடிவு!

அமெரிக்கா வரும் மோடியைப் புறக்கணிக்க அமெரிக்க வாழ் படேல் சமூகத்தினர் முடிவு!

556
0
SHARE
Ad

modi-1அகமதாபாத் – அமெரிக்கா வரும் மோடியைப் புறக்கணிக்க அமெரிக்க வாழ் படேல் சமூகத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.வின், 70வது ஆண்டு விழா கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ் கோவில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்குச் செல்கிறார்.

அங்கு, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.இதற்கு அமோகமான வரவேற்பு உள்ளது.50,000பேர் அவரது பேச்சைக் கேட்க முன்பதிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆனால், இதுநாள் வரை மோடிக்கு அமோக ஆதரவு அளித்து வந்த படேல் சமூகத்தினர் தற்போது அவரைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது பாஜக-வினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள படேல் சமூகத்தினர் தங்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அண்மையில் இந்தப் போராட்டத்தின் போது  கலவரமாக படேல் சமூகத்தினர் வன்முறையில் ஈடுபட்டதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், கடந்த சில நாட்களாகக் குஜராத் மாநிலம் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் குஜதாத் பட்டேல் சமூகத்தினருக்கு, அமெரிக்காவில் வாழும் பட்டேல் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள எடிசன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் படேல் சமூகத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்தக் கூட்டத்தில், படேல் சமூகத்து மக்கள் கோரிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தீர்வு காண முன்வரவில்லை எனக் குற்றம் சாட்டி, அமெரிக்காவில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப் படேல் சமூகத்தினர் புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.

மேலும் இது குறித்து அமெரிக்க வாழ் படேல் சமூகத்துத் தலைவர் லால்ஜி படேல் கூறியதாவது:
“கடந்த முறை அமெரிக்கா வந்த மோடியைப் படேல் சமூகத்தினர் ஆர்வத்துடன் வரவேற்றோம். ஆனால், குஜராத்தில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் படேல் இன மக்களின் கோரிக்கைக்குப் பதில் ஏதும் கூறாமல் புறக்கணிக்கும் மோடிக்குப் பாடம் புகட்டும் வகையில், அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

அதுபோல், குஜராத்தில் அரசின் எந்தவொரு திட்டத்திலும், படேல்கள் பங்கேற்க மாட்டார்கள். மேலும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த, வரி செலுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்” எனக் கூறினார்.