Home Featured நாடு மேல்முறையீடு செய்ய மஇகா-சங்கப் பதிவகத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

மேல்முறையீடு செய்ய மஇகா-சங்கப் பதிவகத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

991
0
SHARE
Ad

 

mic-ros-combo-logo.without title jpgபுத்ரா ஜெயா – தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற சங்கப் பதிவகத்தினரும் மஇகாவும் சதியாலோசனையில் ஈடுபட்டனர் என வழக்கு தொடுத்திருக்கும் முன்னாள் பத்து தொகுதியின் மஇகா தலைவர் ஏ.கே.இராமலிங்கம் குழுவினர் கடந்த 10 ஜனவரி 2017-இல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப் அப்பீல்- Court of Appeal) பெற்ற தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தில் (பெடரல் கோர்ட்) மேல் முறையீடு செய்ய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

ஏ.கே.இராமலிங்கம், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.இராஜூ  ஆகிய எண்மரும் இணைந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த 5 பிப்ரவரி 2016-இல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன்,  டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குநர் முகமட் ரசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகிய எண்மரும் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

MIC Logo 440 x 215மேற்குறிப்பிடப்பட்ட இந்த வழக்கு, பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில்  கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் கடந்த 11 ஜூலை 2016-இல்  தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Court of Appeal) செய்திருந்த மேல்முறையீட்டை 10 ஜனவரி 2017-ஆம் நாள் விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று கூறி, மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென தீர்ப்பு கூறியது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதிகள் அதாவது மஇகா மற்றும் சங்கப் பதிவகம் தரப்பில் கூட்டரசு நீதிமன்றத்திற்கு (பெடரல் கோர்ட்) மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

கூட்டரசு நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கும் மேல் முறையீடு செய்யப்படுவதற்கு முன்னர் அதற்காக முன் அனுமதி கோரும் விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு முன் அனுமதி பெற வேண்டும். கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு தகுதியான வழக்குதானா என்பதை முதலில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் நிர்ணயித்து அனுமதி வழங்குவர்.

அதன் பின்னரே கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைகள் பின் குறிப்பிடப்படும் தேதியில் நடைபெறும்.

அதன்படி அனுமதி கோரும் வழக்கின் விசாரணை இன்று மே 8-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அனுமதி கோரும் விண்ணப்பத்தை விசாரித்த கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் மஇகா-சங்கப் பதிகவகம் தரப்புக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றம் குறிப்பிடும் தேதியில் இந்த மேல்முறையீட்டு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

-இரா.முத்தரசன்