Home நாடு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எதிராக டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா உரையாடல் சர்ச்சை

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எதிராக டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா உரையாடல் சர்ச்சை

1979
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு வரும் ஒலிப்பேழை ஒன்றில் டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் மேற்கொள்ளும் உரையாடலில் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு எதிராக வெளியிட்டிருக்கும் கடுமையான கருத்துகள் தமிழ் ஆர்வலர்களிடையே தீவிர எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உதயாவின் கருத்துகளுக்கு எதிராக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கமும் தங்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது.

அந்த உரையாடலில், வானொலி நேயர் ஒருவர், பெயர் குறிப்பிடாமல், தமிழ்ப் பத்திரிக்கைகளைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரிதாக இருக்கின்றன, அவற்றைக் கீழே விரித்துப் படுக்கத்தான் லாயக்கு, சோறு மடிக்கத்தான் லாயக்கு, தமிழ்ப் பத்திரிகைகள் தேவையற்ற குப்பைச் செய்திகளை வெளியிடுகின்றன, அவற்றை இழுத்து மூட வேண்டும் என்றெல்லாம் அந்த வானொலி நேயர் பேசிக் கொண்டே செல்ல, அதற்கேற்ப உதயாவும், அந்நபருக்கு ஒத்து ஊதுவது போலவும், ஒப்புக் கொள்வது போலவும் பேசுகிறார்.

#TamilSchoolmychoice

சமூக செய்திகளை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை, மாறாக டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ என பெரிய மனிதர்களின் நிகழ்ச்சிகளை மட்டுமே வெளியிடுகின்றன என்றும் அந்த வானொலி நேயர் அந்த உரையாடலில் சாடியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் தவிர்க்க முயற்சி செய்யாமல், அந்த நேயர் கூறும் கருத்துகளுக்கு மறுப்பு சொல்லாமல், மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே உதயா அவரை மேலும் உற்சாகப்படுத்துகிறார்.

இதுபோன்ற உரையாடலை டிஎச்ஆர் வானொலி எப்படி அனுமதியளித்தது – அதுவும் தமிழ் மொழி வானொலி ஒன்று இவ்வாறு செய்திருப்பது – தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் மிகவும் கடுமையான வணிகப் பிரச்சனைகளுக்கிடையில் ஒரு தமிழ் நாளிதழான தமிழ் நேசன் நாளை ஜனவரி 31-ஆம் தேதியோடு மூடப்பட இருக்கும் சோகமான சூழலில் – மற்ற தமிழ்ப் பத்திரிக்கைகள் பல சவால்களுக்கு இடையில் தங்களின் பத்திரிகைகளை நடத்தி வரும் இக்கட்டான நிலைமையில் – இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுவது நிச்சயம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலாகும்.

அதுவும் அதே தமிழ் மொழியைப் பயன்படுத்தி வணிக ரீதியாக செயல்படும் தனியார் வானொலியும், அதன் தமிழ் அறிவிப்பாளரும் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

எனினும் அந்த உரையாடல் டிஎச்ஆர் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

(மேலும் விவரங்கள் தொடரும்)