Home நாடு சுமத்ரா தீவில் சட்டத்திற்குப் புறம்பாக தீயிட்ட 8 விவசாயிகள் கைது!

சுமத்ரா தீவில் சட்டத்திற்குப் புறம்பாக தீயிட்ட 8 விவசாயிகள் கைது!

485
0
SHARE
Ad

Haze in Riauபெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 – சுமத்ரா தீவில் நிலங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் சட்டத்திற்கு விரோதமாக நெருப்பு மூட்டி, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கடும் புகைமூட்டம் ஏற்படக் காரணமான 8 விவசாயிகளை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ளது என்று ‘ஜகார்டா போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவசாயிகள் 8 பேரும் நேற்று கையும் களவுமாக பிடிபட்டதாக அந்நாட்டு காவல்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் கர்னல் ஹெர்மான்ஷியா தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த விவசாயிகள் ஏதாவது நிறுவனங்களின் உத்தரவின் பேரில் இந்த குற்றத்தை புரிந்தார்களா என்பதை அவர் கூறவில்லை.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக அதன் அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.59495main_indonesia_fire_gfmc_330

#TamilSchoolmychoice

இதனால் இந்தோனேசியப் பிரதமர் சுசீலா பம்பாங் யுதோவோனா, காட்டுத் தீயை அணைக்க  2,000 பேரை கூடுதலாக நியமனம் செய்ததோடு, அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பால்தாசர் கம்புயா செய்தியாளர்களிடம் கூறுகையில், காட்டுத் தீ தொடர்பாக 8 தோட்டப்புற நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 4,942 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளது மற்றும் 200 தோட்டப் புற இடங்களில் தீ பற்றியுள்ளது என்பதை செயற்கைக் கோள் புகைப்படங்களின் மூலம் கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வனத்துறை அதிகாரி சாரோஜி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இது போன்று சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் புகைமூட்டம் பரவுகிறது. ஆனால் இந்தோனேசிய அரசாங்கம் தோட்டப்புற நிறுவனங்களையும், விவசாயிகளையும் இதற்குக் காரணம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.