Home நாடு ‘இந்தியன் சென்சேஷன் 2014’ மாபெரும் கலை நிகழ்ச்சி!

‘இந்தியன் சென்சேஷன் 2014’ மாபெரும் கலை நிகழ்ச்சி!

471
0
SHARE
Ad

1551724_808284139197203_1409997351_nகோலாலம்பூர், ஜன 30 – தனுஷ், ஸ்ருதிஹாசன், மாதவன், அனிருத், சிவகார்த்திகேயன், ஆண்ட்ரியா என 15-க்கும் மேற்பட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெரும் மாபெரும் கலை நிகழ்ச்சி ‘இந்தியன் சென்சேஷன் 2014’ வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதி ஸ்டேடியம் நெகாராவில் நடைபெறவுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் கூட்டம் நேற்று கோலாலம்பூரில் உள்ள ‘ஹார்டு ராக் கபே’ ல் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சி குறித்து அதன் ஏற்பாட்டுக் குழுவின் மேலாளரான ஜி.எச்.சி சொலுயூசன்ஸ் மலேசியா (GHC Solutions Malaysia)  சையத் சமீர் கூறுகையில்,”இது ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சி. இத்தனை நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து, அவர்களை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம். மலேசிய மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு சுமார் 4 மணிநேரம் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.”

#TamilSchoolmychoice

“இதற்கான நுழைவுச் சீட்டுகள் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது. இந்த நுழைவுச் சீட்டுகளை இணையம் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ பேஸ்புக் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியை வழி நடத்த மலேசிய சுற்றுலாத்துறை, டிஹெச்ஆர் ராகா வானொலி, ஆஸ்ட்ரோ உட்பட பல முன்னணி ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் சமீர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்கள் பங்குபெறுவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சமீர், இந்தியாவில் இருந்து நிறைய திரை நட்சத்திரங்கள் வருவதால் 4 மணி நேர நிகழ்ச்சியில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்குவதே மிகவும் சவாலான காரியம். எனவே உள்ளூர் கலைஞர் பங்குபெறுவது குறித்து தற்போது முடிவு செய்யவில்லை என்றார்.

நுழைவுச் சீட்டுகள் 100 முதல் 350 ரிங்கிட் வரை 

அவரைத் தொடர்ந்து ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த எப்3 நிறுவனத்தின் தலைவர்  யோகேஷ் சுப்ரமணியம் கூறுகையில், நுழைவுச் சீட்டுகள் 100 முதல் 350 ரிங்கிட் வரை அதன் தரத்திற்கு ஏற்றவாறு கிடைக்கும். சுமார் 8000 பார்வையாளர்கள் இந்நிகழ்விற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். நடிகர் மாதவன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆனாலும் அவரும் நடனம் ஆடுவார். இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய இந்தியாவில் இருந்து சன் தொலைக்காட்சியோ அல்லது விஜய் தொலைக்காட்சியோ வரலாம். பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்தியா மலேசியா உறவு வலுப்படும் 

அவரைத் தொடர்ந்து பேசிய மலேசிய சுற்றுலாத்துறையின் அனைத்துலக நிகழ்வுகளின் தலைவர் டோனி நாகமையா, இது போன்ற நிகழ்சிகளின் மூலம் மலேசியாவின் சுற்றுலாத்துறை மேலும் வளம் பெறும். இந்தியாவில் இருந்து நிறைய திரைப்படங்களுக்கான படபிடிப்புகள் மலேசியாவில் கோலாலம்பூர், புத்ரஜெயா அல்லாமல் சபா சரவாக் மாநிலங்களிலும் நடைபெறும்.அதன் மூலம் இந்தியா மலேசியா உறவு வலுப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் கூட்டத்திற்கு நடிகர் தனுஷ் வருகின்றார் என்று கூறப்பட்டது. எனவே பத்திரிக்கையாளர்கள் நிறைய பேர் அங்கு கூடியிருந்து தனுஷ் வரவிற்காக காத்திருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு சந்திப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது ஆனால் 4.30 மணிக்கு தான் தொடங்கியது. இருப்பினும் செய்தியாளர்கள் பொறுமையுடன் காத்திருந்தனர். ஆனால் இறுதிவரை இச்சந்திப்பில் தனுஷ் வராதது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 – பீனிக்ஸ்தாசன்