Home நாடு ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம்!

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம்!

436
0
SHARE
Ad

Karpal-300-x-200ஜியோர்ஜ் டவுன், ஏப்ரல் 20 – ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள், குடும்ப உறவினர்கள் என அனைவரும் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்த, கர்ப்பால் சிங்கின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக இன்று காலை, அவரது நல்லுடல் பினாங்கு மாநில அரசின் அதிகாரத்துவ அந்தஸ்துடன் கூடிய நல்லடக்கச் சடங்குகளுக்காக டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது.

காலை 8.30 மணி முதல் பொதுமக்கள் அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தத் தொடங்கினர். அதற்கு முன்பாகவே, மண்டபம் முழுக்க மக்கள் நிறைந்து காணப்பட்டதால், கர்ப்பாலின் நல்லுடன் தாங்கிய சவப்பெட்டியை மண்டபத்தின் உள்ளே கொண்டு வருவதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்திற்கு வெளியே இருந்தவர்களும் இறுதிச் சடங்குகளைக் காணும் வண்ணம், மண்டபத்திற்கு வெளியே பெரிய வெண்திரை நிர்மாணிக்கப்பட்டு, அதில் இறுதிச் சடங்குகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

பின்னர் 10.15 மணியளவில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இரங்கல் உரை நிகழ்த்திய பின்னர், கர்ப்பாலின் நல்லுடலை ஏந்திய ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் செல்லும் வழியில் கர்ப்பாலின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட சில முக்கிய இடங்களில் ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

பினாங்கு உயர் நீதிமன்றம், கிரீன் ஹால் சாலையில் உள்ள அவரது அலுவலகம், பினாங்கு சட்டமன்ற கட்டிடம், அவர் கல்வி கற்ற செயிண்ட் சேவியர் பள்ளி, ரங்கூன் சாலையிலுள்ள ஜனநாயக செயல் கட்சியின் தலைமயகம் ஆகிய இடங்களில் மரியாதைக்காக இறுதி ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

பிற்பகல் 1 மணியளவில் பத்து கந்தோங் மயானத்தின் கர்ப்பாலின் நல்லுடல் தகனம் செய்யப்படும்.