
கோலாலம்பூர்: இந்து ஆலயங்களை சட்டவிரோதம் எனப் பொருள்படும் வகையில் ‘ஹாராம்’ என அழைப்பதற்கும், கெலிங் என்ற சொல்லை இந்தியர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்குமாறு கெராக்கான் கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
ஹாராம் ஆலயங்கள் என்ற சொல்லாடலை நிறுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஏற்கனவே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு அன்வார் இன்னும் பதிலளிக்கவில்லை.
ஹாராம் ஆலயங்கள் விவகாரம் குறித்து அமைச்சரவை விவாதிக்கவில்லை என அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான பாஹ்மி பாட்சில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சரவணன், ஹாராம் ஆலயங்கள் விவகாரத்தை, அமைச்சரவை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை – மாறாக பிரதமர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு உத்தரவிட்டாலே போதுமானது எனக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கெராக்கான் கட்சித் தலைவரும் இதே போன்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஹாராம் ஆலயங்கள், என்ற சொற்பிரயோகம் அதிக அளவில் தற்போது சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டிய டோமினிக் லாவ் இந்த சொற்களைத் தடை செய்ய அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.