கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் ஆண்டுப் பேரவை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி விலகி கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் வசம் ஒப்படைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பெர்சாத்து தலைமைத்துவம் குறித்த சர்ச்சைகள் எழுந்தபோது, இன்னும் ஒரு தவணைக்கு மட்டும் நான் பெர்சாத்து தலைவராக நீடிப்பேன் என முஹிடின் அறிவித்திருந்தார்.
ஆனால், அந்த கால நிர்ணயம் நெருங்கி வரும் வேளையில் முஹிடின் பதவி விலகாமல் தவிர்ப்பாரா அல்லது பெர்சாத்து கட்சித் தலைவர் பதவியை மட்டும் விட்டுக் கொடுத்துவிட்டு, பெரிக்காத்தான் கூட்டணி தலைவராக தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பெரிக்காத்தான் கூட்டணி வலுவாக இல்லை – அதனால்தான் அன்வார் வலிமையான தலைவர் போன்று தெரிகிறார் – என அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர்.
முஹிடின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினால் ஹம்சா சைனுடின் தலைமையில் பெரிக்காத்தான் கூட்டணி – பெர்சாத்து கட்சி மேலும் வலிமை பெறும் – என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
அதே சமயத்தில் முஹிடின் பதவி விலகலால், பெர்சாத்து கட்சி உடையலாம் – ஏற்கனவே நீறுபூத்த நெருப்பாக நீடித்துக் கொண்டிருக்கும் ஹம்சா சைனுடின், அஸ்மின் அலி மோதல் விரிவடையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஹம்சா தலைமைப் பொறுப்பை ஏற்றால் அஸ்மின் அலி, பெர்சாத்துவில் இருந்து வெளியேறலாம் என்ற ஆரூடமும் தெரிவிக்கப்படுகிறது.