
(எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூன் 27-ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியீடு காணவிருக்கிறது முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய, மேம்படுத்தப்பட்ட பதிப்பு. அதன் உருவாக்குநரும், மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான முத்து நெடுமாறன் இந்தப் புதிய பதிப்பில் புத்தாக்கக் கூறுகள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என விவரிக்கிறார்)
- 1985-ஆம் ஆண்டில் தமிழைக் கணினித் திரையிலேற்றும் வேள்விப் பயணத்தின் தொடக்கம்!
- 40 ஆண்டுகால தொடர் முயற்சிகளால் மற்ற மொழிகளுக்கு நிகராக உருமாற்றங்கள் கண்டிருக்கும் முரசு அஞ்சல் புதிய பதிப்பு!
- ‘அறிவார்ந்த உள்ளீடும் அழகு தமிழ் எழுத்துகளும்’ – என்ற கருப்பொருளை இலக்காகக் கொண்ட உருவாக்கம்!
- மலேசியா, சிங்கப்பூர், சென்னை என 3 நாடுகளில் முரசு அஞ்சல் அடுத்தடுத்து வெளியீடு
முரசு அஞ்சல் மென்பொருளின் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு மூன்று நாடுகளில் அடுத்தடுத்து கீழ்க்காணும் நாட்களில் வெளியீடு காணவுள்ளது. மூன்று பகுதிகளாக நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சிகள் தேநீர், சிற்றுண்டியுடன் நிறைவு பெறும். அந்தந்த நாட்டு நேரப்படி மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன. தமிழுக்கான இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்ள உங்கள் அனைவரையும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.
கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கான இணைய முகவரி:
https://anjal.net//launch
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்
மலேசியா: வெள்ளிக்கிழமை 27 ஜூன் 2025
இடம்: பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபம், பெட்டாலிங் ஜெயா (BAC College Auditorium, Hisniaga Sdn Bhd, Jalan Utara, Section 14, 46200 Petaling Jaya)
சிங்கப்பூர்: சனிக்கிழமை 5 ஜூலை 2025
இடம்: UPTLC Auditorium, Beaty Road, Singapore
சென்னை: சனிக்கிழமை, 12 ஜூலை 2025
இடம்: அண்ணா நூற்றாண்டு விழா நூலகம்,
கோட்டூர்புரம், சென்னை, தமிழ் நாடு
முரசு அஞ்சல் தொடங்கிய புள்ளி…
1985-ஆம் ஆண்டு காலகட்டம்! உலகம் எங்கும் மேசைக் கணினிகள் அலுவலகங்களையும், பொதுமக்களிடையே பயன்பாட்டையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த ஒரு சூழல். அப்போதெல்லாம் கணினிகளில் ஆங்கில மொழி மட்டுமே உள்ளிடப்பட்டிருந்தன. மற்ற மொழிகளைப் பயன்படுத்த முடியாது.
பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு, தனியார் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிள்ளானைச் சேர்ந்த ஓர் இளைஞர் மனதில், இதே கணினித் திரையில் ஏன் தமிழ் எழுத்துகள் ஒளிரக் கூடாது என்ற சிந்தனைப் பொறி தட்டியது. அந்தக் கேள்வியில் தொடங்கியது ஒரு வேள்விப் பயணம். தகிக்கும் தமிழ் ஆர்வமும் தணியாத தமிழ்ப் பசியும் கொண்ட அந்த இளைஞர் அலுவல் நேரம் முடிந்து, இரவும் பகலுமாக அந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
வேலை முடிந்ததும் இரவு நேரத்தில் தான் வேலை பார்த்த பொறியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து ஆங்கில மொழி போன்று தமிழையும் கணினித் திரைக்குள் கொண்டு வர, முயற்சிகளும் மேற்கொண்டார் அந்த இளைஞர். நெஞ்சிலே எழுந்த தமிழ்ப் பசிக்காக காலநேரம் பார்க்காமல் உழைத்த வேளையில், வயிற்றிலே எழுந்த உணவுப் பசியை ஆற்றிக் கொள்ள, தனக்குப் பிடித்தமான – விலையும் அதிகமில்லாத – ரொட்டி சானாய்-சாம்பார் தால்சா உணவுகளை உண்டார் அந்த இளைஞர்.
பல மாதங்கள் கடுமையான உழைப்பின் பலன்களும் அவர் கண்ட தமிழ்க் கனவுகளும் வீண் போகவில்லை. ஒருநாள் ‘தமிழ்’ என்ற எழுத்துருக்கள் அவரின் கணினித் திரையில் ஒளிர்ந்தன.
தமிழைக் கணினித் திரையிலேற்றி எல்லையில்லா ஆனந்தமும் புளகாங்கிதமும் அடைந்த அந்த இளைஞர்தான் இன்று தனது தமிழ் மென்பொருள், எழுத்துருக்கள் உருவாக்கத்தால் உலகம் எங்கும் புகழடைந்திருக்கும் மலேசியத் தமிழரான முத்தெழிலன் நெடுமாறன். சுருக்கமாக முத்து நெடுமாறன்.
‘தமிழ்’ என்று சொல், கணினித் திரையில் முதன் முதலில் தோன்றிய தருணத்தில் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிக் குவியலை சொற்களால் விவரிக்க முடியாது என பிற்காலத்தில் நேர்காணல் ஒன்றில் விவரித்தார் முத்து நெடுமாறன். தமிழைக் கணினிக்குள் உள்ளிட்டது அவரின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல! காலத்திற்கேற்ற நவீன தொழில்நுட்பத்திற்குள் மற்ற மொழிகளுக்கு நிகராக, தன்னையும் நுழைத்துக் கொண்ட – காலத்தால் அழியாத – தமிழ் மொழியின் வெற்றியும்கூட!
தான் உருவாக்கிய தமிழ் மென்பொருளுக்கு ‘முரசு அஞ்சல்’ எனப் பெயரிட்டார் முத்து நெடுமாறன். அவர் முரசு என்ற சொல்லைத் தேர்வு செய்ததற்கான காரணமும் இருந்தது. அவரின் தந்தை ‘பாப்பாவின் பாவலர்’ எனப் பிரபலமடைந்த கவிஞர் முரசு நெடுமாறன்!
இவ்வாறு 1985-ஆம் ஆண்டு தொடங்கிய முத்து நெடுமாறனின் தமிழ்க் கணினித் துறை பயணம் 40 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் பல்வேறு உருமாற்றங்களைக் கண்ட முரசு அஞ்சல், இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் தமிழ் பயனர்களால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முரசு அஞ்சல் புதிய பதிப்பு வெளியீடும் – முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்ட ‘உரு’ நூல் வெளியீடும்!
முரசு அஞ்சல் மென்பொருளை ஏகப்பட்ட உருமாற்றங்களுடன், உள்ளடக்கங்களுடன் புதுப்பித்து அடுத்தடுத்து மூன்று நாடுகளில் வெளியிடுகிறார் முத்து நெடுமாறன்.
அதே நிகழ்ச்சியில், முத்து நெடுமாறனின் தமிழ் மொழி தொடர்பான தொழில்நுட்ப முயற்சிகளையும் வாழ்க்கைச் சம்பவங்களையும் விவரிக்கும் ‘உரு’ என்ற நூலும் வெளியீடு காண்கிறது. தமிழ்நாட்டின் ‘மெட்ராஸ் பேப்பர்’ என்னும் இணைய இதழில், தமிழ் நாட்டின் ஊடகவியலாளர் கோகிலா என்பவர் தொடராக எழுதிய கட்டுரைத் தொடரின் நூல்வடிவம்தான் ‘உரு’.
முரசு அஞ்சல் வெளியீட்டுத் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் பரபரப்பான தருணங்களில், நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள்-மென்பொருளை மேம்படுத்துதல் – போன்ற வேலைப் பளுவுக்கிடையிலும், நேரம் ஒதுக்கி முரசு அஞ்சல் புதிய பதிப்பு குறித்து உரையாட ஒப்புக் கொண்டார் முத்து நெடுமாறன்.
இனி, அவருடனான உரையாடல்களில் இருந்து அவரின் சில கருத்துகள்…
முதல் கட்டமாக முரசு அஞ்சலின் புதிய சேர்க்கைகள் யாவை என்பது குறித்துக் கூற முடியுமா?
முத்து நெடுமாறன்: முரசு அஞ்சல் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பல இன்பகரமான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. எனவே, அந்த அனுபவத்தை நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமே பெற முடியும். எல்லாவற்றையும் முன்கூட்டியே கூறி, நிகழ்ச்சியின் சுவையை, பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கப் போகும் இனிய அனுபவத்தை குலைக்க விரும்பவில்லை.
தமிழைக் கணினியில் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், எளிமையாகவும் பதிவிடுவதற்கான அனுபவத்தை பயனர்கள் பெற முடியும். ஏற்கனவே, விண்டோஸ் இயங்கு தளத்திலும், ஆப்பிள் கருவிகளின் தளங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முரசு அஞ்சல், இரண்டு தளங்களிலும் தங்கு தடையின்றி, சுமுகமாகப் பயன்படுத்தப்படும் வகையில் முரசு அஞ்சலை உருவாக்கியுள்ளேன் என்பதை மட்டும் இப்போதைக்குக் கூற முடியும்!
இன்னொரு புத்தாக்க முயற்சியாக +60196659018 என்ற கைப்பேசி எண்ணில் வாட்ஸ்எப் தளத்தில் பயனர்கள் தொடர்பு கொண்டால் ‘சாட்போட்’ (chatbot) – என்ற தளத்துடன் அவர்கள் தொடர்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தளத்தின் மூலம் ஆங்கிலம் அல்லது தமிழ் என இருமொழிகளிலும் நீங்கள் தகவல்களைப் பகிர முடியும். முரசு அஞ்சல் வெளியீடு குறித்த நிகழ்ச்சி விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
முரசு அஞ்சல் புதிய பதிப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வாறு பயன் தரும்?
முத்து நெடுமாறன்: நான் எப்போதும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் தேவைகளை, உணர்ந்தே முரசு அஞ்சலை உருவாக்கி, மேம்படுத்தி வந்திருக்கிறேன். மலேசியா, சிங்கப்பூரில் மாணவர் சமுதாயமும், ஆசிரியர் சமூகமும் முரசு அஞ்சலை நிறைய அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, அதற்காக நான் நிறைய சிந்தித்திருக்கிறேன். அவர்கள் பயன்பெறும் வகையில் நிறைய உள்ளடக்கங்களைச் சேர்த்திருக்கிறேன்.
குறிப்பாக தமிழ் சார்ந்த தரவுகளை மாணவர்கள், ஆசிரியர் அதிகம் தேடாமல் பெறுவதற்கான இணைப்புகளை உருவாக்கியிருக்கிறேன். மேலும் அதிகமான இன்ப அதிர்ச்சிகளை முரசு அஞ்சலைப் பயன்படுத்தும்போது மாணவர், ஆசிரியர் சமூகத்தினர் உணர்வார்கள்.
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு உதவும் அம்சங்கள் ஏதாவது?
முத்து நெடுமாறன்: தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தமிழில் எழுதுபவர்கள், குழுவாகத் தங்களின் எழுத்துகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் போன்றவர்களுக்காகவும் நிறைய சேர்க்கைகளை உருவாக்கியுள்ளேன். அவர்களும் அறிமுக விழா வரை காத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் இப்போதே கூற விரும்பவில்லை.
முரசு அஞ்சல் புத்தாக்கங்கள் எவை என்பதை விவரிக்க முடியுமா?
முத்து நெடுமாறன்: முரசு அஞ்சல் புதிய பதிப்பின் இலக்கு தமிழைக் கணினியில் உள்ளிடு செய்வதை எளிமையாக்குவதுதான். அந்த அடிப்படையில், தமிழைவிட சிரமமான உள்ளிடுகளைக் கொண்ட மற்ற மொழிகள் எவ்வாறு கணினித் துறையில் உள்ளிடப்படுகின்றன என்பதைக் கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாக அணுக்கமாகக் கவனித்து ஆராய்ந்து வந்ததன் விளைவாக அந்த மொழிகளுக்கு நிகராக தமிழிலும் உள்ளிடு செய்வதற்கான புதிய உத்திகளையும், சிந்தனைகளையும் பயன்படுத்தி உள்ளேன்.
எழுத்துருக்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து தமிழ் எழுத்துருக்களையும் மேம்படுத்தி பல புதிய சேர்க்கைகளை மற்ற மொழிகளுக்கு நிகராக முரசு அஞ்சில் இணைத்துள்ளேன். ‘அறிவார்ந்த உள்ளீடும் அழகு தமிழ் எழுத்துகளும்’ என்ற கருப்பொருளை இலக்காகக் கொண்டதுதான் முரசு அஞ்சல் புதிய பதிப்பு.
ஆனால், இந்த முயற்சியும், தொடர் பயணமும் இத்துடன் முடியப் போவதில்லை. நாம் அனைவரும் அறிந்தபடி தொழில்நுட்ப உலகின் புதிய தாக்கமாக செயற்கை நுண்ணறிவு நம் பயன்பாட்டில் நுழைந்துள்ளது. எனவே, அந்த தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்தும் நான் முரசு அஞ்சல் உருவாக்கத்தில் சிந்தித்துள்ளேன்.
(குறிப்பு: 22 ஜூன் 2025 மக்கள் ஓசை நாளிதழின் ஞாயிறு பதிப்பில் வெளியான கட்டுரை)